‘Rise East Creation’ பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்துள்ள புதிய பேய் படம் ‘பேய் பசி’.
இந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரசித்தி பெற்ற குடும்பத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணா பாஸ்கர் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவர் யார் என்கிற விவரத்தை விரைவில் அறிவிப்போம். கதாநாயகியாக அம்ரிதா நடித்துள்ளார். இவர்களோடு விபின், ஐ.ஐ.டி.யில் படித்து நமீதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் டேனியல், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் கருணாகரன் ஒரு மிக சுவாரஸ்யமான துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டோனி சானின் ஒளிப்பதிவில், தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமியின் உடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத் தொகுப்பில், மதனின் கலை இயக்கத்தில், இந்த ‘பேய் பசி’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளரான ‘Rise East Creation’ நிறுவனத்தின் ஸ்ரீநிதி ராஜாராம் தமிழ் சினிமா துறைக்கு புது வரவு என்றாலும் அவரது ஆதரவும், ஒத்துழைப்பும், இப்படத்திற்காக அவர் செய்திருக்கும் பிரம்மாண்டமான விளம்பர யுக்திகளும் அவரை பெரிய தயாரிப்பாளர்களுக்கு இணையாக காட்டுகிறது.
‘#பேய் பசி’ படம் குறித்து இப்படத்தின் இயக்குநரான ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில், ”பொதுவாகவே டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ்கள் இரவு நேரத்தில் பயம் கொள்ளும்வகையில்தான் காட்சியளிக்கும். இதனை மையமாகவே வைத்தே இப்படத்தின் கதையை உருவாகியுள்ளது.
இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் உள்ளே நடக்கும் கதை. ஒரே இடத்தில் நடந்தாலும், எந்தவிதத்திலும் சுவாரஸ்யம் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்தபொழுது , ‘பேய் பசி’ கச்சிதமாக இருக்கும் என்று நினைத்தோம். அதையே வைத்துவிட்டோம். இந்தக் கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போது படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் பின்னணி இசை இப்படத்தின் ஒரு முக்கிய ஹீரோவாகும். இக்கதையையும், காட்சிகளையும் மெருகேற்றி, திகிலில் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது அவரது இசை. இப்படத்திற்காக மிக சுவாரஸ்யமான ஒரு ப்ரோமோ பாடலையும் அவரே பாடியுள்ளார். ஒரு தரமான சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளோம் என உறுதியாக நம்புகிறேன்…” என்றார் இயக்குநர்.