இயக்குநர் வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது எந்த வகை படமாக இருந்தாலும் சரி, அது ஒரு பார்ட்டி உணர்வைத்தான் வழங்கும்.
தற்போது அவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயரே ‘பார்ட்டி’ என்பதால் அது மிகப் பெரிய பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ‘பார்ட்டி’ படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான ‘பார்ட்டி’ உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். பிரவீன் KLன் சிறப்பான படத் தொகுப்பு படத்தை சரியான வேகத்தில் கொண்டு செல்லும்.
வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். வெங்கட் பிரபுவின் இந்த ‘பார்ட்டி’ படத்துக்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுது போக்கு விழாவாக இத்திரைப்படம் இருக்குமாம்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இதைப் பற்றிக் கூறும்போது, “இயக்குநர் வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தாலே மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்குமான படத்தை தருவதுதான்.
நிச்சயமாக, இந்தப் ‘பார்ட்டி’ படத்தின் கதை நடக்கும் பின்னணியால் படம் கிளாமர் விஷயங்களை கொண்டிருக்கும். சென்சார் போர்டு உறுப்பினர்கள் எங்கள் படத்தின் முதல் பார்வையாளர்களாக இருந்து படத்தை சரியாக மதிப்பிட்டிருப்பது எங்கள் குழுவுக்கே மகிழ்ச்சியளிக்கிறது.
‘பார்ட்டி’ படத்தின் கதையைப் பற்றி எதையும் இப்போது வெளிப்படையாக கூற முடியாது. ஆனால், ஒரு புத்தாண்டு கொண்டாத்தின்போதுதான் கதை நடக்கிறது. அதில் நிறைய கதாபாத்திரங்கள், ட்ராமா, ஆக்ஷன், காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் நிச்சயமாக இருக்கும்..” என்றார்.