தமிழக காவல் துறையின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களூக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலையில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இன்றைய காலக்கட்டத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள்தான் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.
பள்ளிகளுக்கு அருகேகூட போதைப் பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள்தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள்தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும், மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப் பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள்தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும்.
போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழி நடத்த வேண்டும்…” என்றார்.