லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் இருவரும் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பன்னிக்குட்டி’.
இப்படத்தில் மேலும், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
K இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குநர் அனு சரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப் பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.
ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி படக் குழுவினர் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கை, ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் K பேசும்போது, “இந்த ‘பன்னிக்குட்டி’ படம் எனக்கு மிக முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும்…” என்றார்.
அறிமுக நாயகியான லஷ்மி பிரியா பேசும்போது, “இந்தப் படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணி புரிந்தது பெரிய அனுபவம். படத்தின் என்னுடைய கதாபாத்திரம் அழகாக திரையில் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்கள். இது ஒரு நேர்மையான படம். எங்கள் படம் முழுமையாக தயாராகிவிட்டது, அதை பார்வையாளர்களிடம் நீங்கள்தான் கொண்டு சேர்க்க வேண்டும்…” என்றார்.
தயாரிப்பாளர் ஷமீர் பேசும்போது, “இந்தப் படத்தை தியேட்டருக்கு கொண்டு வர உதவிய லைகா புரடக்சனுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால்தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படதொகுப்பாளரும்கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும். சின்ன படங்களுக்கு பத்திரிகையாளர்கள் நீங்கள்தான் ஆதரவு தர வேண்டும்…” என்றார்.
திண்டுக்கல் ஐ.லியோனி பேசும்போது, “இந்தப் படத்தின் மூலமாக 21 வருடங்களுக்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்தப் படத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குநர் ஒரு காரணமாகத்தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குநர் அனு சரண் வேலை பார்ப்பார். அனு சரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர்.
கருணாகரனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியாக இருக்கும். இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். இந்தப் படம் அனைவருக்கும் மிகப் பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக் குழுவிற்கு எனது வாழ்த்துகள்..” என்றார்.
இயக்குநர் அனு சரண் பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த லைகா நிறுவனத்திற்கும், இயக்குநர் ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன்.
ரவி முருகையாவின் கதைதான் இந்த ‘பன்னிக் குட்டி’. இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் கூறும்போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள். ஆனால் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள்.
இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னிக் குட்டியை வைத்துதான் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது. விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை. பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்திதான் படத்தை உருவாக்கினோம்.
உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும். அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கைதான் வாழ்கை என்பதை இந்த படம் கற்றுக் கொடுக்கும்…” என்றார்.
நடிகர் கருணாகரன் பேசும்போது, “ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்த கதையை இயக்குநர் கூறியபோது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள்தான்.
இயக்குநரின் பதட்டமில்லாத தன்மை, என்னை ஆச்சர்யபட வைத்தது. இசையமைப்பாளர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். இந்த படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்தப் படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள்தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.