‘தெரு நாய்கள்’ படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ‘ஐ கிரியேஷன்ஸ்’ படக் குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’.
‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, சாலி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர்கள் கூல் சுரேஷ், ஆர்யன், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, ராம் சிவா, ஆண்டனி, ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ் சங்கையா, இசையமைப்பாளர் அம்ரீஷ், பாடகர் மலேசியா ஷாஸ், பாடலாசிரியர் உமா, பி.ஆர்.ஓ. யூனியன் சங்கத் தலைவர் விஜயமுரளி, கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் மன்சூரலிகான், மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர்களான உஷா, சுரேஷ்குமார், எஸ்.எம்.டி.கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ படத்தின் பாடல்களும், டிரையிலரும் போட்டுக் காட்டப்பட்டது..!
விழாவில் பேசிய நடிகர் மன்சூரலிகான் “கலைக்கு ஜாதி, மதம், மொழி கிடையாது என்பதால் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றும் முயற்சிக்குக்கூட நான் எதிரானவன். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., வி.கே.ஆர். ஆகியோரெல்லாம் மண்வெட்டி பிடித்து கட்டி, வளர்த்து எடுத்த சங்கம் அது. எனவே குறுகிய மனப்பாண்மை கூடாது என்பது என் கருத்து.
பொதுவா, நான் எந்த சினிமா விழாவுக்கு போனாலும், அந்தப் படத்தை ஆஹா, ஒஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும் பாராட்டி பேச மாட்டேன். .ஆனால், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘வளர்ந்தவுடன் சிதைத்து விடவும்’, ‘சாப்பிட்டவுடன் போய் விடவும்’ அப்படிங்கற மாதிரி, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ எனும் இப்படத்தின் டைட்டிலே இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.
இப்படித்தான், ‘ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட ராஜ குலோத்துங்க……’ என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப் பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்தபோது, ‘தெற்கு தெரு மச்சான்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர் சத்யராஜும், இயக்குநர் மணிவண்ணனும் ‘இது என்னய்யா டைட்டில்.. போய்யா…’ என்றனர்.
ஆனால், அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம், ‘ஒரு பங்ஷன்ல என் பேமிலியும், ரஜினி சார் பேமிலியும் கலந்து கொண்டோம். அப்போ, என் பசங்களும், ரஜினி சார் பசங்களும், உங்க படபேர வச்சு, அதை தப்பு இல்லாமல் சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க.. அப்பத்தான் நினைச்சேன்… நீ ஜெயித்து விட்டாய்..’ என்று என என்னைப் பாராட்டினார். அப்படி இந்தப் பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.
மோடி அரசு கொண்டு வந்த டீமானிஸ்ட்ரேஷனுக்கு முன்பு, தமிழ் சினிமாவும், தென் இந்திய சினிமாவும் நல்லாத்தான் இருந்தது. டிமானிஸ்ட்ரேஷனுக்கு அப்புறம் 500 சிறு பட புரடியூசர்கள் காணாமல் போயிட்டாங்க.
விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீஸர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு…. அது இருக்குன்னு…. சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம்.
ஆனால், திடீர்ன்னு எட்டு வழிச் சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம். 8 வழி யார் கேட்டா..? 8 வழிச் சாலைக்கு அவசியம் என்னன்னும் , அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும்.. யாருக்கெல்லாம் பயன்…? அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல…?
சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய் ..? இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம், எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால், 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச் சாலையை போடத் துடிக்குது.
கோவை சிறுவாணி தண்ணிய தனியாருக்கு விற்க பார்க்குது. அடுத்து ஆக்ஸிஜன் விற்பனைக்கு வரவிருக்கிறது. அடுத்து தாய் பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும்.
தமிழன் முழித்திருக்கும்போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது மத்திய அரசு. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் ‘மேக் இன் இண்டியா’ திட்டம் என்கிறார்கள்.
நீ என்ன வெங்காயம் விற்க, மயிர் புடுங்க.. ஆட்சி நடத்துகிறாய்…? ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள்…? 5 பைசா பொது மக்களுக்கு வந்ததா..? சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இதுதான் மத்திய அரசின் ‘மேக் இன் இண்டியா’ திட்டமா..?
பெரிய, பெரிய நடிகன் பின்னாடி போனா இப்படித்தான். மத்திய அரசின் “பணம் செல்லாமை” அறிவிப்புக்கு பின் நைட்டோடு நைட்டாக ஓஹோ என ஓடிய படங்கள் எத்தனை தியேட்டர்களில் எத்தனை படங்கள் ஒடவில்லை..? அதற்கு பணத்தை திருப்பி தந்தானா ? பணக்காரன் யாராவது கஷ்டப்பட்டானா? பல கோடி புது நோட்டுகள் எப்படி பல பணக்காரர்கள் கையில் கிடைத்தன. இது என்ன நாடா..?
திருவள்ளுவர் சொன்னது மாதிரி நம் நாட்டை நமக்கே வளமாக்கி எடுத்துக்கொள்ளத் தெரியாதா..? ஏன் இத்தனை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர்..? எல்லாம் கமிஷன்தான் காரணம். கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி நாம் தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம்.
காந்தி, காமராஜர் எல்லாம் அன்று பிரிட்டீஷ்காரனை ஓட விட்டார்கள். இன்று, இவர்கள், கொரியா, ஜப்பான்காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்தப் படம் ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ நாம் இந்த மாதிரி திட்டங்களை கிழிக்கவும் நாடு நாசமாவதை தடுக்கவும் தயங்கக் கூடாது…” என ஆவேசமாக பேசி அமர்ந்தார்.
மன்சூரைத் தெரடர்ந்து பேசிய இப்பட இயக்குநர் ஹரி உத்ரா, “ஹீரோ ஹீரோயின் வேல்யூ இல்லாத புது படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சிக்க வேண்டும். மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான ‘தெரு நாய்கள்’ படத்தில் சுட்டி காட்டினேன். அப்படம் பேசப்பட்ட அளவிற்கு வசூலைக் குவிக்கவில்லை. இரண்டாவதாக, இந்த ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ படத்தில் ஹாரர் கதை என்றாலும் பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில் படித்த, படிக்காதவன் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன்.
எஸ்.டிஆர், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இப்படத்தின் சிங்கிள் டிராக், டீஸர் எல்லாம் வெளியிட்டு உதவியது மறக்க முடியாதது நன்றி. இப்படத்தின் வெற்றியை பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன்…” என்றார்.