‘விகோசியா மீடியா நிறுவன’த்தின் மூலம் மணிகண்டன், நாகேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பாண்டியோட கலாட்டா தாங்கலை’.
‘நிதின் சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், சிங்கம் புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சுரேஷ், இசை – சுகுமார், இயக்கம் – T.குணசேகரன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் டி.குணசேகரன், “புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். சோத்துக்கே பஞ்சப்பாடு பாடும் அவர்களால் வாடகை பணத்தை சரியாக கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் பல முறை, பல வழிகளில் இவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முயலும் குடியிருப்பின் உரிமையாளருக்கு தோல்விதான் கிடைக்கிறது.
‘இனி என் வழி இவர்களுக்கு சரிப்படாது; நமது காவலாளியின் வழிதான் இவர்களுக்கு பொருந்தும்’ என எண்ணி, பணம் வசூலிக்கும் பொறுப்பை தனது காவலாளியிடம் ஒப்படைக்கிறார் குடியிருப்பின் உரிமையாளர். காவலாளியின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன மூன்று நண்பர்களும், அவனை சமாளிக்க, திட்டமிட்டு அவனுக்கு மது விருந்து அளிக்கின்றனர். போதை தலைக்கேறிய காவலாளியோ, கால் தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறான்.
‘இந்த மூவரும்தான் தன் சாவிற்கு காரணம்..’ என்று கருதும் காவலாளியின் ஆவி அவர்களுக்கு தொடர்ந்து கொடைச்சல் கொடுத்து வருகிறது. அந்த ஆவியிடம் இருந்து தப்பிக்க, பேய்கள் காப்பகம் நடத்திவரும் ‘பக்கிரிசாமியை’ நாடுகின்றனர் மூவரும். ஆனால் காவலாளியின் ஆவியோ, காப்பகத்தில் இருந்த மற்ற ஆவிகளை விடுதலை செய்து, அவர்களுடன் சேர்த்து மேலும் புதிய தொல்லைகளை கொடுக்கிறது. இந்த ஆவிகளின் பிடியில் இருந்து மூவரும் தப்பித்தார்களா…? இல்லையா…? என்பதே இந்த ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைப்படத்தின் கரு..” என்றார்.