நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பில் ‘கபாலி’ புகழ் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான ‘Dr.ஷூமேக்கர்’ மற்றும் ‘Beware of Castes – Mirchipur’ ஆகிய இரண்டு ஆவணப் படங்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி பிரசாத் லேபில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனர்களாக இயக்குநர் ராம், இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் சுசீந்திரன் , எடிட்டர் லெனின் , வெங்கி, எழுத்தாளர் எஸ்.வி.ஆர்., வழக்கறிஞர் ரமேஷ் ராஜன், Dr. ஷூ மேக்கர் ஆவண படத்தின் நாயகன் இம்மானுவேல், நடிகர் ஜான் விஜய், தீண்டாமை ஒழிப்பு கழக தலைவர் சாமுவேல், மிர்ச்சிபூரில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட சத்யவான் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் Dr. ஷூ மேக்கரின் முதன்மை கதாபாத்திரமான திரு.இம்மானுவேல் (Dr. ஷூ மேக்கர் ஆவணப்படம் இவரை பற்றியதுதான்) பேசும்போது, “என்னைப் பற்றிய இந்த ஆவணப் படத்தை பார்க்கும்போது எனக்கு அழுகைதான் வந்தது. இவ்வளவு மக்கள் அதை பார்த்து எனக்கு அங்கீகாரம் கொடுக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது..” என்று சொல்லி கண் கலங்கினார்.
உடனே இயக்குநர் பா.ரஞ்சித் அவரிடம் “நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மிகப் பெரியது , உங்களுக்கு நாங்கள்தான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்…” என்றார்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் ராம் பேசும்போது, “இந்தியாவின் முக்கியமான ஆவணப் பட இயக்குநர்களுக்கு சவாலாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெய்குமார். அதை எப்போதும் தன்னுடைய திரைப்படங்களின் மூலம் புரட்சி செய்து வரும் இயக்குநர் ரஞ்சித் தயாரித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழில் இது போன்ற ஆவணப் படங்கள் வருவது மிகவும் அரிதான ஒன்றாகும். இதில் Dr. ஷூ மேக்கர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஷூ மேக்கர் ஆவணப் படத்தை நான் உலக தரத்தில் உருவாகி உள்ள மிக சிறந்த ஆவணப் படங்களில் ஒன்று என்று கூறுவேன்.
Beware of Castes – Mirchipur ஆவண திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது. இது போன்ற கருத்துள்ள குறும் படங்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் எடுப்பது மிகவும் கடினம். ஆனால் ஆவண படம் என்று வரும்போது, அதில் நாம் இதை போன்ற புரட்சிகரமான கருத்துகளை பேசலாம்.
தமிழகத்தில் இப்போது உள்ள காலகட்டத்தில் இந்த ஆவணப் படங்களை திரையரங்கில் திரையிடுவது கடினமான ஒன்று. இன்றைய காலகட்டத்தில் எம்மாதிரியான படங்கள் பி மற்றும் சி சென்டர்களில் தர லோக்கல் ஹிட் ஆகிறது என்பதும், அவை எந்த ஜாதியை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் என்பதும் நமக்குத்தான் தெரியுமே..?” என்றார் இயக்குநர் ராம்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, “இப்போது திரையிடப்பட்ட Dr. ஷூ மேக்கர் மற்றும், Beware of Castes – Mirchipur ஆகிய இரண்டு திரைப்படங்களும் என்னை வியக்க வைத்தது. அதே போல் என்னை பாதிக்கவும் செய்திருக்கின்றன. மிர்சிபுரில் நடந்த சம்பவம் போல் இனி ஒரு சம்பவம் நடைபெறவே கூடாது. அவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்.
குறும் படம், ஆவணப் படம் ஆகியவற்றிக்கான ஒரு சரியான தளத்தை உருவாக்க நானும் முயற்சியில் இருக்கிறேன். நான் ‘மெரினா’ திரைப்படம் இயக்கும்போது மீனவர்களை பற்றி ஒரு ஆவண திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை எடுக்க திட்டமிட்டேன். அதன் பின் ‘கதகளி’ திரைப்படத்தின் படபிடிப்பு கடலூரில் நடைபெற்றபோது, அங்கு இருந்த மீனவர்களை மையமாக கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த ஆவணப் படத்தை இயக்கினேன்.
இப்போது இந்த இரண்டு ஆவணப் படங்களை பார்க்கும்போது, இவை இரண்டும் எனக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. நிச்சயம் இதை போன்ற மிகச் சிறந்த படைப்புகள் வெளிவர வேண்டும். நானும் அதற்கான முயற்ச்சியில் ஈடுபடுவேன்.
இயக்குநர் ரஞ்சித் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ‘படத்தில் ஹீரோ அணிந்திருக்கும் ஷூவை பார்த்தீர்களா..?’ என்று என்னிடம் கேட்டார். அவர் ஏன் அந்த கேள்வியை என்னிடம் கேட்டார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் எந்த கேள்வி கேட்டாலும் அதில் வேறு ஒரு ஆழமான அர்த்தம் ஒளிந்திருக்கும். இதிலும் அப்படி ஒரு அர்த்தம் இருந்திருக்கும் என்று நினைக்கிறன். அப்படிபட்ட ஒரு ஆழமான கருத்துடைய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தை தயாரித்துள்ளார். இதை போன்று அவர் மேலும் பல ஆவண படங்களை தயாரிக்க வாழ்த்துகிறேன்..” என்றார்.
நடிகர் ஜான் விஜய் பேசும் போது, “மகிழ்ச்சி..! இயக்குநர் பா.ரஞ்சித் என்னுடைய தம்பி. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காகத்தான் இங்கு வந்தேன். உங்களோடு சில வாரத்தைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதுவரை சிகப்புதான் புரட்சி. இனி நீலமும் புரட்சியாகத்தான் தோன்றும்..” என்றார்.
இறுதியாக பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதன் பின் “இங்கு வந்திருந்த அனைவரும் இப்படத்தை பார்த்து இவர்களுக்காக பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று அர்த்தம்.. அதற்கு மாறாக கோபப்படுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.
திரையிடப்பட்ட இரண்டு குறும் படங்களும் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றன.