மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘ஓ அந்த நாட்கள்.’
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகியிருக்கும் இத்திரைப்படத்தில், 1980’களின் நட்சத்திர நாயகிகளான ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நால்வரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் மேலும் ஜித்தின் ராஜ் – லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்சனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குநர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத் தொகுப்பைக் கவனித்திருக்கிறார். நளினமான நடன அசைவுகளுக்கு ஜான் பிரிட்டோ பொறுப்பேற்றிருக்கிறார்.
1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்ப பாங்கான கதையை படைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன்.
இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருப்பதும் கூடுதல் சுவாரஸ்யம்.
தற்போது இந்த ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.