full screen background image

நாட் ரீச்சபிள் – சினிமா விமர்சனம்

நாட் ரீச்சபிள் – சினிமா விமர்சனம்

Crackbrain Productions  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள்( Not Reachable).

இந்தப் படத்தில் விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், ஹரிதாஸ்ரீ, சாய்  ரோகிணி, இலக்கியா, விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா, கலங்கல் தினேஷ், மணீஷா, முரளி கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பேனர் – Crackbrain Productions  & M Creations, எழுத்து – படத் தொகுப்பு & இயக்கம் – சந்துரு முருகானந்தம், ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர், இசை – சரண் குமார், ஒலி வடிவமைப்பு – விக்னேஷ் பாஸ்கரன், கலை இயக்குநர் – ஜெகதீஷ், VFX – ஹரிஹரன்.K, சந்துரு முருகானந்தம், DI – பயர்பாக்ஸ் ஸ்டுடியோஸ், வண்ணக் கலவை – ஸ்ரீகாந்த் ரகு, ஒப்பனை – பெர்சி அலெக்ஸ், பாடல் வரிகள் – உடுமலை பிரவின், M.C.விக்கி, தி மாங்க், பத்திரிகை தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.

கோவை அருகில் இருக்கும் வேடபட்டி என்ற போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமில் இருந்து ஒரு அவசரத் தகவல் வருகிறது. அவர்கள் குறிப்பிடும் முகவரிக்கு உடனே சென்று விசாரிக்கும்படி சொல்கிறார்கள்.

ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டரான கயல் அங்கு சென்று பார்க்கும்போது அங்கே ரியா என்ற பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கினை கயலின் கணவரான இன்ஸ்பெக்டர் விஷ்வாவுடன் இணைந்து விசாரிக்கச் சொல்கிறார் கயலின் தந்தையான சிட்டி போலீஸ் கமிஷனர்.

ஏற்கெனவே மனஸ்தாபத்தினால் மண முறிவு ஏற்பட்டு பிரிந்திருக்கும் நிலையில் கணவன், மனைவி இருவரும் இணைந்து இந்த வழக்கினை துப்புத் துலக்கத் துவங்குகிறார்கள்.

இதற்கிடையில் வர்ஷா என்ற பெண் காணால் போயிருக்கிறார். அந்த வீட்டின் தோட்டத்தில் இருந்து ராஜலட்சுமி என்ற பெண்ணின் உடலும் போலீஸுக்குக் கிடைக்கிறது. இந்த மூன்று பேருக்கும் இருக்கும் தொடர்புகளைக் கண்டுபிடித்தால் கொலையாளி யார் என்பதைக் கண்டறியலாம் என்று இன்ஸ்பெக்டர் விஷ்வா நினைத்து விசாரணையைத் தொடர்கிறார்.

இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர், மர்டர், மிஸ்டரி திரைக்கதையைக் கொண்ட படம்.

ஹேமாவாக நடித்திருக்கும் சாய் தன்யா, ரியாவாக நடித்திருக்கும் ஹரிதாஸ்ரீ, வர்ஷாவாக நடித்திருக்கும் ரோகிணி, ராஜலட்சுமியாக நடித்திருக்கும் மணீஷா, லாவண்யாவாக நடித்திருக்கும் இலக்கியா, ஹேமாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஷர்மிளா என்று பெண் கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இதில் ஹேமாக நடித்த சாய் தன்யா சில இடங்களில் மிரட்டியிருக்கிறார். அவருடைய உடல் மொழியும், வெறித்தனமான பார்வையும் சைக்கோ கொலையாளியாக்கான அடையாளத்தை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

கயலாக நடித்த சுபா அவ்வப்போது தனது சொந்தப் பிரச்சினைகளை நினைவில் வைத்திருந்து கோபப்படும் காட்சிகளில் கொஞ்சம் நடித்திருக்கிறார். நாயகன் விஷ்வா தனக்கு அது அவசியமே இல்லை என்பதைப் போல மிக இயல்பாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார்.

பட்ஜெட் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவில் மேற்கொண்டு வித்தை காட்ட வாய்ப்பில்லாமல் கண்ணை உறுத்தாத வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசையும், பின்னணி இசையும் போதுமானதாகவே இருந்தது. சில இடங்களில் பின்னணி இசை நமக்குப் பாரத்தைக் கொடுக்காமல் அமுங்கியிருக்கிறது.

படத்தின் போக்கில் ஆங்காங்கே சொல்லி வைத்தாற்போல் டிவிஸ்ட்டுகள் வந்து கொண்டேயிருக்க. முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், இது அத்தனையையும் ஹீரோவே வெளிப்படுத்துகிறார்  என்பதுதான் ஒரு சோகமான விஷயம். இதனாலேயே நம்மால் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது.

கிளைமாக்ஸில் தெரிய வரும் உண்மை இப்போதைய காலக்கட்டத்திற்கு தேவையில்லாதது. இது போன்று ஓரினச் சேர்க்கையைத் தூண்டிவிடுவதைப் போல வரும் திரைப்படங்களும் சமூகத்திற்கு கேடுதான் விளைவிக்கின்றன.

இந்தக் கொலைகளுக்கான பின்புல காரணமாக வேறு ஏதாவது ஒன்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கலாம். ஓரினச் சேர்க்கையை பிரதானப்படுத்தியது படத்திற்கு பேக் டிராப்பாகிவிட்டது.

மற்றபடி ஒரு மர்டர், மிஸ்டரி கதையில், மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சுவையான சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் டைப் படம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

RATING : 3 / 5

Our Score