1979-ல் நடிகை ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் இயக்குநர் துரையின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘நீயா’.
தற்போது ‘நீயா-2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.
‘ஜம்போ சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீதர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – L.சுரேஷ், இசை – சமீர், ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், தயாரிப்பு – A.ஸ்ரீதர்
இத்திரைப்படம் அதி தீவிரமான காதல் கதையை கொண்டது என்பதால், காட்சியமைப்பில் அதிக கவனம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வாவும், மலரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். ஆடலும், பாடலுமாக சுற்றித் திரிகிறார்கள் காதலர்கள். இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் மலருக்கு தலையில் இடி விழுந்ததுபோல் செய்தி கிடைக்கிறது. தனது காதலனான சர்வாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாகிறாள் மலர்.
தனது காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள் மலர். பழைய நினைவுகளோடு. அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து செல்கிறாள். புதுமணத் தம்பதிகள் ஹனிமூனைக் கொண்டாடி கொண்டிருப்பதை அறியும் மலர் அந்த அறைக்குள் செல்கிறாள். சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் சிறிது நேரம் கழித்து அந்த அறைக்குள் வருவது தெரிய வர, அதே அறைக்குள் மலரும் ஒளிந்து கொள்கிறாள்.
சர்வாவும், திவ்யாவும் படுக்கையில் கட்டி பிடித்து புரள… இதைப் பார்த்து மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி ஒரு காட்சியில், சர்வாவாக ஜெய், காதலி மலராக ராய் லட்சுமி , மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா மூவரும் நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது.
இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமியும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அதனை படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைத்திருக்கிறார்கள்.
விதி வலியது என்பதுபோல், காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெயித்ததா..? அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெயித்ததா..? இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரசா ஜெயித்தாரா? இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன..? என்பதே இந்த ‘நீயா-2’ படத்தின் கதை.
‘நீயா’ படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது ஒரு பாம்பு. அதுபோலவே, இந்த ‘நீயா-2’ படத்திலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது.
‘நீயா’ படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த ‘ஒரே ஜீவன்’ பாடலை இந்தப் படத்தில் மறுஉருவாக்கமும் செய்திருக்கின்றனர்.
அதோடு, இசையமைப்பாளர் ஷபீரின் இசையில் ‘தொலையுறேன்’ பாடலும், ‘இன்னொரு ரவுண்டு’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த ‘நீயா-2’ திரைப்படம் வரும் மே மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படத்தின் தயாரிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.












