நட்சத்திரக் காதல் தம்பதியினரான நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது.
‘நானும் ரௌடிதான்’ படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக சமந்தாவும் நடித்துள்ளார்.
அனிருத் இசையில் இந்தப் படத்திலிருந்து ‘டுடுடு’, ‘நான் பிழை’ ஆகிய பாடல்களும் மற்றும் படத்தின் டீசரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்துள்ளது. இதனை படக் குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

சமந்தாவுக்கு, நயன்தாரா கேக் ஊட்டிவிட அருகில் நின்றிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகர் விஜய் சேதுபதியும் கை தட்டி மகிழும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் அந்தப் பதிவில், “இதற்காக கடவுளுக்கு நன்றி. திறமையான நடிகர்களுடன் பணி புரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவு. என்னுடைய கதையை திரையில் கொண்டு வருவதற்கு இதனைவிட சிறப்பான நடிகர்களைக் கேட்க முடியாது.
சிறந்த விஜய் சேதுபதி, எப்பொழுதும் அழகான, திறமையான நயன்தாரா என்னுடைய தங்கமே…! அழகான மிக சிறந்த நடிகையான சமந்தா. இந்தப் படம் சிறப்பாக உருவானதற்கு காரணமான இந்த அனைவராலும் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.

இந்தப் படத்தில் பணி புரிந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும். நன்றி அழகான மக்களே..” என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நீங்கள் வயிறு வலிக்க சிரிப்பதற்காக நானும் காத்திருக்கிறேன். படம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நயன்தாரா தனக்கு அளித்த கம்மல் பரிசுடன், “அன்புள்ள கடிஜா, காதலுடன் கண்மணி” என்ற குறிப்பையும் புகைப்படமாக பகிர்ந்து, “நன்றி டார்லிங் நயன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.