full screen background image

“எதன் அடிப்படையில் சென்சார் செய்கிறார்கள்..?” – நடிகர் ஸ்ரீகாந்த்தின் ஆவேச கேள்வி

“எதன் அடிப்படையில் சென்சார் செய்கிறார்கள்..?” – நடிகர் ஸ்ரீகாந்த்தின் ஆவேச கேள்வி

அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம், முதன்முறையாக தயாரிப்பாளராகவும் மாறியிருப்பதுதான்.

இவருடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘நம்பியார்’ திரைப்படம் ஆகஸ்ட் 19-ல் ரிலீஸாகவிருப்பதுதான்.

nambiyaar stills

அறிமுக இயக்குநரான கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நம்பியார்’ படத்தை வெளியிடவிருப்பதும் ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ்தான். 

படம் பற்றி பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், “சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார். இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்ஜிஆருக்கு வில்லங்கம் செய்பவர் நம்பியார்.

அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த கூட்டணிதான் மனிதனின் மனது. ஒரு பக்கம் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்போது கெட்ட சிந்தனைகள் அதனைக் கெடுக்க முயற்சிக்கும். ஸோ.. நமக்குள்ளேயே எம்ஜிஆரும் இருக்கிறார். நம்பியாரும் இருக்கிறார் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

நம்பியார் – எம்.ஜி.ஆர். கான்செப்ட்டை எப்படி பிடிச்சீங்க..?

அந்தப் பெருமை இயக்குநர் கணேஷாவையே சேரும். எல்லோருடைய வாழ்க்கையிலுமே போராட்டம் இருக்கிறது. ஒரு கேரக்டரின் குணங்களை அவற்றின் பெயர்களிலேயே புரியவைத்தால் ஆடியன்ஸ் எளிதாக படத்துடன் கனெக்ட் ஆகிவிடுவார்கள் அல்லவா..? அதனால், ஹீரோவின் பெயர் ராமச்சந்திரன். அவனுக்கு நிறைய போராட்டங்கள். அவரைக் குழப்பிவிடுவது கூடவே இருக்கும் நம்பியாரான சந்தானம். இங்கே ‘நம்பியார்’ என்பது கற்பனை பாத்திரம்தான். அது எப்படி என்ற சஸ்பென்ஸை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

DSC_10165

சந்தானம்கூட நடிச்சதுல ஏதாவது இண்ட்ரெஸ்டிங் அனுபவம்..?

இந்த காம்பினேஷனிலேயே நிறைய சுவராஸ்யங்கள் இருக்கின்றன. படம் முழுக்க சந்தானம் இருப்பார். படத்தின் ஒரு முக்கிய பகுதியில் திரையில் நான் பேசுவேன். ஆனால் சந்தானத்தின் குரலில். அதாவது எனக்குள்ளிருக்கும் நம்பியார், எம்ஜிஆரை டாமினேட் செய்யும் இடம் அது. அந்த கான்செப்டே சந்தானத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரையே ஒரு பாடலையும் பாட வைத்தோம்.

சாதாரண மனிதன் பாடுவதற்கும், குடிபோதையில் பாடுவதற்கும் ஒரு வித்தியாசம் இருக்குமே அதனை அச்சு அசலாக அப்படியே கொண்டு வந்தார் சந்தானம். சவாலான அந்த பாடலை ஒரு மணி நேரத்தில் பாடி முடித்தார். அவருடைய டயலாக் டெலிவரிக்கு நான் நடித்ததும் வித்தியாசமாக இருந்தது. சந்தானத்தை கூர்ந்து கவனித்து அவரது மாடுலேஷன், டயலாக் டெலிவரியைக் கொண்டு வந்திருக்கிறேன். சந்தானம் போலவே தேவதர்ஷினியும் கலக்கியிருக்கிறார்.

படத்தோட காஸ்டிங்ல காமெடியன்கள் அதிகமா இருக்காங்க..?

DSC_12809

ஜான் விஜய், பஞ்சு சுப்பு, ஆதவன், அர்ஜுன், டெல்லி கணேஷ் என உங்களை எண்டெர்டெயின் பண்ண நிறைய பேர் இருக்கிறார்கள். முக்கியமாக, பார்த்திபன். அவர்தான் படத்தை வாய்ஸ் ஓவரில் தொடங்கி வைப்பார். எம்.ஜி.ஆர். வரலாற்றை எல்லோரும் ரசிக்கும் வகையில் ப்ரெசெண்ட் செய்திருக்கிறார்.

படத்துல ஆர்யாவும், விஜய் ஆண்டனியும் இருக்காங்க போல..?

படத்தில் ‘ஆற அமர’ என்ற ஒரு முக்கிய பாடலின் செட் பற்றி தெரிந்துகொண்ட விஜய் ஆண்டனி, அந்த பாடலைப் பார்க்க ஆசைப்பட்டு செட்டுக்கு வந்தார். அவரையும் சின்ன மூவ்மெண்ட் போட வைத்து உள்ளே இழுத்தோம்.

கதையில் ஒரு நண்பர் வந்து எனக்கு உதவுவார். அந்தக் கேரக்டருக்கு என்னுடைய நண்பன் ஆர்யாவையே கூட்டி வந்தோம். ஆர்யா என் பள்ளி நண்பன். ஆர்யா பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும். இந்த படத்தில் நடித்து முடித்தபின், நான் மிகவும் தயங்கியபடியே ‘மச்சி… ரொம்ப தேங்க்ஸ். பேமெண்ட் எவ்வளவு…?’ என்று கேட்டேன். பதிலுக்கு ஆர்யா எனக்கு விட்ட டோஸை ஓப்பனாக சொல்ல முடியாது. இது போன்ற நண்பர்களைத்தான் நான் சம்பாதித்த பெரிய சொத்தாகக் கருதுகிறேன். ஆர்யாவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடித்திருக்கிறார்.

DSC_10426

ஒரு தயாரிப்பாளரா படத் துவக்கம் முதல் இன்றுவரையிலான உங்கள் மனநிலை..?

இது ஒரு ஆபத்தான ரோலர்கோஸ்டர் பயணம் என்றே சொல்வேன். ஏற்ற இறக்கம், த்ரில், பயம் எல்லாமே இதில் அடங்கியிருக்கிறது. இன்று படம் தயாரிப்பது எளிது. ஆனால் அதனை வெளியிட பெரிய போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. பல விஷயங்கள் இருக்கிறது.

அதோடு இன்னொரு விஷயம். இந்த படத்துக்கு சென்சாரில் ‘யு/ஏ’ கொடுத்திருக்கிறார்கள். நான் கேட்கும் கேள்வி, ஒன்றே ஒன்றுதான். சென்சார் எந்த அடிப்படையில் பண்ணப்படுகிறது..? என்னவிதமான ஏற்றத்தாழ்வுகள் அங்கே பார்க்கப்படுகின்றன..?

ஆபாசம் இல்லை, வன்முறை இல்லை, ஏன் முத்தக் காட்சிகூட இல்லை. தவறான வசனங்களும் இல்லை. பெண்களைத் தவறாகக் காட்டவில்லை. ஆனாலும் என் படத்துக்கு ‘யு/ஏ’ கொடுத்திருக்கிறார்கள். அப்போது அதெல்லாம் இருந்தால்தான் ‘யு’ சர்டிஃபிகேட் கொடுப்பார்களோ..?

என் படத்திற்கு ‘யு/ஏ’ கொடுத்ததற்கான காரணம் என்னவென்று இப்போதுவரையிலும் எனக்கு புரியவில்லை.

வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் வரும். அவற்றை சமாளித்து ஜெயிப்பது நம் கையில்தான் இருக்கிறது என்ற நல்ல கருத்தைத்தான் சொல்கிறது என் படம். நமக்குள்ளேயேதான் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் இருக்கிறது. இந்த விஷயத்தை சொல்கிறோம். இதை சொல்வதற்கும் ‘யு/ஏ’ கொடுத்தால் படம் எடுப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறது சென்சார் போர்டு..?

DSC_13768

தொடர்ந்து தயாரிப்பீர்களா..?

நிச்சயமாக… புதியவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. போட்ட முதலீடு திரும்ப வந்தால்கூட போதும். ரசிகர்களுக்கு நல்ல படங்களைக் கொடுக்க ஆசைப்படுகிறோம். அதனை தீர்மானிக்கப்போவது ரசிகர்கள்தான். அவர்கள் ‘நம்பியாரு’க்கு தரவிருக்கும்
ஆதரவுதான் எங்கள் பலம்.” – என்று சொல்லி முடித்தார் நடிகரும், தயாரிப்பாளருமான ஸ்ரீகாந்த்.

Our Score