ஏற்கெனவே பல வருடங்களுக்கு முன்பாக 24 மணி நேரத்தில் பல நடிகர், நடிகைகளை வைத்து ‘சுயம்வரம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து சாதனை படைத்தது தமிழ்ச் சினிமாவுலகம். இப்போது வெறும் 12 மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடித்து சாதனை படைத்துள்ளார்கள்.
ஜெயலட்சுமி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரித்திருக்கும் படம் ‘நடு இரவு.’ அறுபது வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இந்த ‘நடு இரவு’தான்.
இந்தப் படத்தில் கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா, ஆயிசா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் மோனிகா என்ற சிறுமி நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – ராம்பிரகாஷ்
இசை – ஆர்.ரமேஷ்கிருஷ்ணா
எடிட்டிங் – விஜய்ஆனந்த்
கலை – சி.பி.சாமி
தயாரிப்பு – வி.எஸ்.மோகன்குமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் புதுகை மாரிசா.
படம் பற்றி கூறிய இயக்குநர் மாரிசா, “ஒரு நாள் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்த கஷ்டமாகத்தான் இருந்தது. எனினும் சாதனையை படைக்க விரும்பியதால் படப்பிடிப்பை பனிரெண்டு மணி நேரத்திற்குள் முடித்துவிட்டோம்.
ஒரு கிராமத்திற்கு நண்பனின் திருமணத்திற்காக போகும் மூன்று ஜோடிகள், தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு பங்களாவில் ஒரு இரவு மட்டும் தங்க முடிவு செய்கிறார்கள். அந்த பங்களாவில் ஏற்கனவே உள்ள பேய் அவர்களை எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதையும், அவர்கள் பேயிடம் இருந்து தப்பிதார்களா, இல்லையா என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படமாக்கியிருக்கிறோம்…” என்றார்.