‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் படத் தொகுப்பாளராகப் பணி புரிந்த கோபி கிருஷ்ணாவின் ‘கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்’ டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘நாயே பேயே.’
இந்தப் படத்தில் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தில் நடித்த பிரபல நடன இயக்குநரான தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குநரான சக்தி வாசன் எழுதி, இயக்குகிறார்.
கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, மற்றும் ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நிரன் சந்தர், இசை – என்.ஆர்.ரகுநந்தன், கலை இயக்கம் – சுப்பு அழகப்பன், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பாளர் – சக்கரத்தாழ்வார், சண்டை இயக்கம் – ஸ்டான்ட் ஜி.என்., நடன இயக்கம் – தினேஷ், தினா, இணை இயக்குனர் – வே.செந்தில் குமார், ஸ்டில்ஸ் – மோதிலால், தயாரிப்பு மேற்பார்வை – அஸ்கர் அலி, விஜயகுமார், டிசைன்ஸ் – ஜோசப் ஜாக்சன், தயாரிப்பு – கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சக்திவாசன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
படம் பற்றி இயக்குநர் சக்திவாசன் பேசுகையில், “நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான்.
இந்த சூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.
ஒரு நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்தி விடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் அவர்கள் அந்தப் பேயிடம் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்லியிருக்கிறோம்..” என்றார்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், படத் தொகுப்பாளருமான கோபி கிருஷ்ணா, நாயகன் தினேஷ், நாயகி ஐஸ்வர்யா, தயாரிப்பாளர்கள் மோகன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, நடிகர்கள் சாம்ஸ், தம்பி ராமையா, இயக்குநர்கள் எழில், பேரரசு, எம்.ராஜேஷ் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.