‘நானும் ரௌடிதான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் பார்த்திபன், மன்சூர் அலிகான், அழகம் பெருமாள், கலை இயக்குநர் கிரண் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கம்போல் ஹீரோயின் நயன்தாரா மிஸ்ஸிங்.
படத்தில் பெண் போலீசின் மகனாக விஜய் சேதுபதியும், ஆண் போலீசின் மகளாக நயன்தாராவும் நடித்திருக்கிறார்களாம்.
விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “நான் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். அதையெல்லாம் பார்த்து என்னுடைய அம்மா பாராட்டியதில்லை. இந்த படத்தில் நான் நடிகர் பார்த்திபன், மன்சூர் அலிகான் போன்றோர் உடன் நடிக்கிறேன் என்றதும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
நீங்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த படத்தை 120 ருபாய் கொடுத்து பார்க்கலாம். நான் பொய் சொல்லமாட்டேன் உண்மையதான் சொல்லுவேன். கண்டிப்பாக என்னை மகிழ்வித்த இந்த படம் உங்களையும் மகிழ்விக்கும்..” என்றார்.
நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, “எனக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடிக்கும்போது நிறைய வித்தைகளை கற்றுக் கொடுத்தவர் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர். இந்த படத்தில் அவருடைய மகன் திலிப் சுப்பராயன் மாஸ்டருடன் பணியாற்றி உள்ளேன். அவருக்கு நிறைய தொழில் நுட்பம் தெரிந்துள்ளது. அவருடைய திறமைகள் பாரட்டுக்குரியது. விக்னேஷ் சிவனை பார்க்க கல்லூரி மாணவர் போல் இருந்தாலும், இயக்குநராக அவர் சிறப்பாக பணியாற்றினார்…” என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது, “பாடல்களை நன்றாக விமர்சித்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் நிஜமாகவே எங்கள் அனைவரின் மனதுக்கும் நெருக்கமான திரைப்படம். எனக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனை பாடல் ஆசிரியராகவும் மிகவும் பிடித்துள்ளது. அவருடைய பாடல் வரிகள்தான் படத்துக்கு மிகப் பெரிய பலம். எங்களுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் பயன்படுத்தி உழைத்துள்ளோம்..” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், “இந்தப் படத்தின் இயக்குநர் கரெக்ட் செய்வதில் வல்லவர். நாங்க அதையெல்லாம் பார்த்து பொறாமைப்படத்தான் முடியும். அதாவது காட்சிகளை சரியாக கரெக்ட் செய்து எடுப்பதில் வல்லவர்னு சொன்னேன். நீங்க வேற கரெக்ட் பண்றதுன்னு நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை..?” என்றார் கிண்டலாக..!