‘நானும் ரெளடிதான்’ படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி ஹீரோயினாக நடித்த நயன்தாராவைப் புகழ்ந்து தள்ளினார்.
விஜய் சேதுபதி பேசும்போது, “நான் ஒரு காலத்தில் புதுப்பேட்டையில் இருக்கும்போது தனுஷ் சார், செல்வா சார் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அப்போதே நாங்களெல்லாம் நண்பர்கள்தான். இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த தனுஷ் சாருக்கு என்னுடைய மிகப் பெரிய நன்றி.
இயக்குநர் விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தை பார்த்துவிட்டு நான் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அதில் இருந்து எங்களுடைய நட்பு நன்றாக வளர்ந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் பல முறை இந்த கதையை என்னிடம் கூறி மாற்றங்கள் செய்து இறுதியில் படத்தில் என்னை நாயகனாக நடிக்க வைத்துவிட்டார்.
இந்த கதையை விக்னேஷ் சிவனிடம் முதல் முறையாக கேட்டபோதே எனக்கு அது ஐம்பது சதவிகித வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. பிறகு அதில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இன்னும் நம்பிக்கை அதிகமானது. காட்சிகள் எடுக்கப்பட்டபோது இன்னமும் கூடியது.
அனிருத் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையும் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. அனிருத்தின் இசை இந்தப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும், விளம்பரத்தையும் கொடுத்துள்ளது.
நாயன்தாராவோடு இந்தப் படத்தில் நடித்துள்ளது எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. முதல்ல நயன்தாராதான் எனக்கு ஜோடியா நடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருந்திச்சு. அவங்க அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். எப்படி நடந்துக்குவாங்களோ என்று இன்னொரு பக்கம் யோசனையாவும் இருந்தது.
ஆனால் ஷுட்டிங்கில் எனக்கு அவங்க அறிமுகமான பத்தாவது நிமிடத்திலேயே, அந்த பயவுணர்வையெல்லாம் அடிச்சு உடைச்சுட்டாங்க நயன்தாரா. அவ்வளவு எளிமையா பழகுனாங்க.
நானெல்லாம் சின்ன பிரேக் கிடைத்தால்கூட கேரவனுக்குச் சென்று ஓய்வெடுப்பேன். ஆனால், நயன்தாரா அப்படியல்ல.. ஒரு மணி நேரம் பிரேக் விட்டாலும் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு அவர் அசைவதில்லை. அவ்வளவு டெடிகேஷன். இந்தப் படத்தின் மூலமாக இந்த ஒரு நல்ல விஷயத்தை நான் நயன்தாராவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சின்போது அதில் ஒரு சீரியஸான ஆக்க்ஷன் விஷயமும் வெளிப்படும். காட்சியின் முடிவில் காமெடி வரும். இந்த வகையில் இயக்குநர் எப்படித் இதைத் திட்டமிட்டு எடுத்தாரென்று எனக்குத் தெரியவில்லை. நடிக்கும்போது இதெல்லாம் எனக்குத் தெரியவேயில்லை. ஆனால், படம் பார்க்கும்போது அது அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.
பார்த்திபன் சாருடன் நடித்தது நல்ல அனுபவத்தைத் தந்தது. அவர் காட்சிகளில் மெருகேற்றிக் கொண்டே இருப்பார். அதேபோல்தான் ஆர்.ஜே. பாலாஜியும். உடனுக்குடன் புதிது புதிதாக யோசித்து செய்தார்கள். மன்சூர் அலிகானின் நடிப்பையும் செட்டில் ரசித்தேன். அவரோட பாடி லாங்குவேஜே ஒரு டைனாசர் போல் தெரிந்தது.
தயாரிப்பாளர் தனுஷ் படப்பிடிப்பின் முதல் நாள் அன்றே, ‘ஷூட்டிங்கில் ஏதாவது குறை இருந்தால் தாயங்காமல் என்னிடம் சொல்லுங்கள்…’ என்றார். ஆனால், ஒரு குறையும் இல்லை. அதனால் கடைசி நாளன்று அவருக்கு போன் செய்து, நன்றி தெரிவித்துக் கொண்டேன்..” என்றார்.