full screen background image

163 மொழிகளில் உருவாகும் தமிழ்த் திரைப்படம் ‘நான் கடைசிவரை தமிழன்’!

163 மொழிகளில் உருவாகும் தமிழ்த் திரைப்படம் ‘நான் கடைசிவரை தமிழன்’!

சி.ஆர்.டி.நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘நான் கடைசிவரை தமிழன்’.

இப்படத்துக்கு தமிழ்த் திரையுலகத்தின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள்  விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

நான் கடைசி வரை தமிழன் படத்தின் தொடக்க விழா  சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் தாரை தப்பட்டை முழங்க இன்று காலை பூஜையுடன் நடந்தது. பின்னர்  டிஜிட்டல் தியேட்டரில்  பட பெயர் அறிவிப்பு விழா நடந்தது.

இதில் பிரபல  இயக்குநரும், இப்படத்தின் இசை அமைப்பாளருமான  டி.ராஜேந்தர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன் , நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகர் தயாரிப்பாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

இந்த விழாவில் தயாரிப்பாளரும், இயக்குநருமான எம்.ஏ.ராஜேந்திரன் பேசும்போது, “நான் கடைசி தமிழன் பட தொடக்க விழாவிற்கு வந்து கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர். அனைவரும் நமது சகோதர சகோதரிகளே. நாம் இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் முதலில் நாம் நல்ல மனிதனாக இருப்போம்.

தமிழன் என்றால் சரித்திரம் படைப்பவன். தமிழன் என்றாலே அது வரலாறு. என் தமிழுக்கு பல பெயர்கள் உண்டு அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ்..  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ‘நான் கடைசிவரை தமிழன்’ படத்தின் கதை மிகவும் மாறுபட்ட விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை ஒரு விஞ்ஞானி. மகன் ஒரு ராணுவ வீரன். இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள். எதற்காக, ஏன்  என்பதுதான் கதை. 

ஆங்கிலத்தில் ‘அவதார் 2-ம்’ பாகம் படம் 160 மொழியில் எடுக்கப்பட்டது. அதை மிஞ்சும் வகையில் 163 மொழியில் இந்த ‘நான் கடைசிவரை தமிழன்’ படம் உருவாகிறது. ‘அவதாா்’ படம் சாத்தியம் என்றால் இந்த ‘நான் கடைசிவரை தமிழன்’ படமும் சாத்தியம்தான்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்..” என்றார்.

நடிகர் கராத்தே ராஜா பேசும்போது, “இந்த விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சிதான். சிறு பிள்ளையாக இருந்தபோது டி.ராஜேந்தரின் பாடல்கள் என்றால் தாளம் போட்டு பாடிக் கொண்டே இருப்பேன். அவரது பாடல்கள் அந்த அளவுக்கு எனக்குப் பிடிக்கும்.

இந்த நான் கடைசிவரை தமிழன் என்று படத்தின் பெயரை கேட்டாலே மனதில் பதியும் அளவுக்கு அருமையான டைட்டிலை வைத்திருக்கும் இயக்குநர் எம்.ஏ.ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.  இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “இந்த நான் கடைசிவரை தமிழன் திரைப்படம் 163 மொழிகளில் உருவாகிறது என்பதே பெருமையான விஷயம். இப்படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதிலும் மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மிகச் சிறப்பு என்னவென்றால் தமிழ் திரையுலகையே ஆட்டிப் படைத்த ஜாம்பவான்  டி.ஆர். இங்கு வந்திருப்பதுதான் .

கொஞ்ச நாளாவே  சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கொடுக்கலாம் என்ற பேச்சு நடக்கிறது. என்னைக் கேட்டால் அந்த பட்டத்தை டி.ராஜேந்தருக்கு தரலாம்.  (இப்படி சொன்னவுடன் டி.ராஜேந்தர் எழுந்து “அதெல்லாம் வேண்டாம்..” என்றார்).

ஆர்.கே.அன்புசெல்வன் பேசும்போது, “இந்த நான் கடைசிவரை தமிழன் என்ற டைட்டிலை கேட்கும்போதே வீரம் வெறி பிறக்கிறது. இப்படத்துக்கு பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கிறார். படத்தின் டைட்டிலை கேட்டவுடனேயே அவர் இசை அமைக்க ஒப்புக் கொண்டார். பண்ணாரி அம்மன் என்ற படத்திற்கு இசை அமைத்தவர் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளிப்படத்துக்கு அவர் இசை அமைப்பது மகிழ்ச்சியான விஷயம்..” என்றார்.

இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரான டி.ராஜேந்தர் பேசும்போது, “இந்தப் படத்துக்கு நான் கடைசி வரை தமிழன் என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம்.ஏ.ராஜேந்திரன் கூறினார். ராஜேந்திரன் என்று சொன்னாலே திறன். அந்த திறன் இந்த ராஜேந்திரனிடத்தில் இருக்கிறது. பண்ணாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன்.

இந்தப் படத்தின் டைட்டிலில் தமிழன் என்றிருக்கும் ஒரு வார்த்தைதான் இப்படத்துக்கு நான் இசை அமைக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம். நான் முருகனை அழைத்தால் சத்தத்தோடு கூப்பிடுவேன். முருகன் என்றால் தமிழ். இந்த  நான் கடைசிவரை தமிழன் படத்திலும் தமிழ் இருக்கிறது. இயக்குநர் ராஜேந்திரனிடம்  எனக்கு பிடித்தது அவருடைய பிடிவாதம்தான். நானும் பிடிவாதக்காரன்.

இயக்குநர் இராஜேந்திரனிடம் “ஏன் ‘கடைசிவரை தமிழன்’னு சொல்றிங்க..  ‘உயிர் உள்ளவரை தமிழன்’னு சொல்லுங்க.. ‘உணர்வுள்ளவரை  தமிழன்’னு சொல்லுங்க..  ‘மூச்சிருக்கும்வரை தமிழன்’னு சொல்லுங்க.. ‘பேச்சிருக்கும்வரை தமிழன்’னு சொல்லுங்க..”  என்றேன். “இல்லை சார். ‘கடைசிவரை தமிழன்’தான் எனக்கு பிடித்திருக்கிறது..”  என்றார். 

அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது மலைப்பு. தமிழன் என்றால் இனிப்பு. அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் படத்துக்கு தமிழில் டைட்டில் வைத்திருக்கிறார். அதனால்தான் இந்தப் படத்துக்கு இசை அமைக்க நான் ஒப்புக் கொண்டேன்..” என்றார்.

Our Score