உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் புதிய படம் ‘மேல் நாட்டு மருமகன்.’
இந்தப் படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். ஆண்ட்ரீயன் என்னும் பிரான்ஸ் நாட்டு பெண் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா, இசை – வே.கிஷோர் குமார், படத் தொகுப்பு – விஜய் கீர்த்தி, கலை – ராம், நடனம்- சங்கர், பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்., தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த், தயாரிப்பு – மனோ உதயகுமார், எழுத்து, இயக்கம் – எம்.எஸ்.எஸ்.
படம் பற்றி இயக்குநர் எம்.எஸ்.எஸ்., பேசும்போது, “இந்த ‘மேல்நாட்டு மருமகன்’ ஆபாசக் காட்சிகள், வன்முறை, என்று எதுவுமே இல்லாமல், குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம். ராஜ்கமல் – ஆண்ட்ரியன் இருவரும் அந்தந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள்.
எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கலைஞனை இழந்து விட்டு நிற்கிறோம். இந்தப் படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன். அதற்கு அவர் முதலில், ‘நான் இப்போ அமெரிக்கா போறேன்.. வந்து எழுதுறேன். அவசரம்னா வேற யாரையாவது எழுதச் சொல்லி வாங்கிக்குங்க.. பிளீஸ்..’ என்றார். ஆனால் நானோ, ‘நீங்கதான் எழுதணும்’னு வற்புறுத்தினேன்.
நிலைமையை புரிந்து கொண்ட அவர். சட்டென்று அவரது காரில் என்னை அழைத்துச் சென்று காரில் இருந்தபடியே 33 நிமிடங்களில் பாட்டெழுதி கொடுத்துவிட்டார். ஓடும் காரிலேயே பாட்டெழுதித் தந்த அந்த நட்பையும், நண்பனையும் இழந்து நிற்கிறது இந்த படக் குழு.
“யாரோ யார் இவளோ”
சந்தோஷத்தின் பேர் இவளா”
என்று அருவியாய் வந்து விழுந்த அவரது எழுத்தாற்றல் மிகப் பெரியது. அது மட்டுமல்ல; படத்தில் மற்ற பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களை கேட்டு, அவர்கள் புதியவர்கள் என்பதையும் அறிந்து மனதார பாராட்டிய அந்த பெருந்தன்மையை எங்களது படக் குழுவினர் ஆயுசுக்கும் மறக்கவே மாட்டோம்..” என்றார்.