full screen background image

“செவாலியே விருது எனது ரசிகர்களுக்கு சமர்ப்பணம்..” – நடிகர் கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான உரை..!

“செவாலியே விருது எனது ரசிகர்களுக்கு சமர்ப்பணம்..” – நடிகர் கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான உரை..!

செவாலியே விருதை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரான்சு நாடு ‘செவாலியே’ விருதினை நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும்வகையில் நடிகர் கமல்ஹாசன், ‘வாட்ஸ் அப்’பில் 2 நிமிட குரல் பதிவினை வெளியிட்டுள்ளார்.

“பிரான்சு அரசு கலை இலக்கியத்திற்கான ‘செவாலியே’ விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன் பணிவுற்று அவ்விருதினை ஏற்கிறேன்.

அவ்விருதின் பெருமை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய சிவாஜி கணேசனையும், வட நாட்டு பாமரரும் அறியச் செய்த காலஞ்சென்ற சத்தியஜித்ரேவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.

‘செவாலியே’ வழங்க உள்ள செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரான்சு தூதர் அலெக்சாண்டர் சிக்லருக்கும் எனது நன்றி. இனி நான் செய்யவேண்டிய கலை இலக்கிய பணிக்கான உக்தியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன்.

கலை கடற்கரையில் கை மண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலை கடல், அலைகள் இத்தகைய தருணங்களில் கரை மோதி என் போன்றோர் முகத்தில் தெளித்து, மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது.

இதுவரையிலான என் கலைப் பயணம் தனி மனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கை தாங்கி எழுத்தும், கலையும் அறிவித்த பெரும் கூட்டத்துடனே நான் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள். நான்கு வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம்.

என்னை பெற்றோர் இருந்து பார்க்கவியலாத குறை என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும் என் சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது. அவர்களுக்கு என் நன்றிகள்..” என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார் கமல்ஹாசன்.

Our Score