full screen background image

“என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க வேண்டும்” – நடிகர் சிம்புவின் வேண்டுகோள்..!

“என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க வேண்டும்” – நடிகர் சிம்புவின் வேண்டுகோள்..!

“தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்…” என்றும், “எனது ரசிகர்கள் மாஸ்டர்’ படத்தையும், விஜய்யின் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ படத்தையும் பார்க்க வேண்டும்” என்றும் நடிகர் சிலம்பரசன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும்  எனது அன்பும், வாழ்த்துகளும்!

‘ஈஸ்வரன்’ பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான் இந்தக் கொரானா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேசமயம்  அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர்’ படம் திரையரங்கிற்கு மட்டுமே வர வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு அவர் செய்யும் மரியாதை.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை’ ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால், திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வர வேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

அதில், எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள், ‘மாஸ்டர்’ படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கொரானா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும்’, ‘ஈஸ்வரனும்’ செய்யும் என்று நம்புகிறேன்.

கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. இதேபோல், திரையரங்குகளும் முழுமையாகத் திறக்கப்பட்டால் ஒழிய அந்தப் பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும்.

தமிழக அரசு தயை கூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து,  பாதுகாப்பு விதிகளை அதிகரித்து,  திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்…” என்று கூறியிருக்கிறார்.

Our Score