குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக நடிகர் கார்த்திக்கும், அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் படம் ‘முத்துராமலிங்கம்’.
ஹீரோயினாக பிரியா ஆனந்த் மற்றும் சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார், நிர்வாக மேற்பார்வை – கமுதி ஏ.செல்வம்.
இந்தப் படத்தில் ஹீரோ கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில், ‘தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா’ என்று தொடங்கும் பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு கவிஞர் பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைக்கேற்ப பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இந்த ‘முத்துராமலிங்கம்’ படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு (முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக்) பாடல் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம். இப்படத்தையும் சேர்த்து பஞ்சு அருணாசலமும், இசைஞானி இளையராஜாவும் 40 ஆண்டு காலமாக திரையுலகில் பவனி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












