‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாடல்கள் மூலம் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றி நின்ற இசையமைப்பாளர் C.சத்யா, தற்போது மீண்டும் ‘உன்னோடு கா’ திரைப்படம் மூலம் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரான அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரிக்க, அறிமுக இயக்குநரான R.K. இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆரி மற்றும் மாயா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரபு, ஊர்வசி, பால சரவணன் மற்றும் மிஷா கோஷல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
‘உன்னோடு கா’ திரைப்படத்திற்கு இசையமைத்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்யா.
“நான் இசையமைத்த ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அபிராமி மெகா மாலில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற ராமநாதன் சார், நான் இசையமைத்த பாடலை கேட்டு என்னை வெகுவாக பாராட்டினார். அதன் பலனாக எனக்கு கிடைத்த வாய்ப்புதான் ‘உன்னோடு கா’.
முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
பொதுவாக பிள்ளைகள் காதலுக்காக வீட்டைவிட்டு ஓடிவிட்டால் வருத்தப்படும் பெற்றோறரைத்தான் இதுவரை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில், அதைக் கொண்டாடும்வகையில் ‘ஓடிட்டாங்க’ என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது.
‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ பாடலுக்கு பிறகு மனோ மற்றும் கிருஷ்ணாராஜ் இருவரும் 15 வருடங்கள் கழித்து இந்த பாடலை இணைந்து பாடியுள்ளனர்.
“இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மகள் வைமித்ரா பாடியுள்ள ‘ஊதே ஊதே’ பாடல்தான். இந்தப் படத்திற்கு அமைந்த ஒரு சிறப்பம்சம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம். முழுக்க முழுக்க குழந்தைகளால் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு மதன் கார்க்கியின் தனித்துவமான வரிகள் மேலும், மேலும் அழகு சேர்த்துள்ளது.
‘ரா’ என்னும் தமிழ் வார்த்தையை ‘தா’ போல் உச்சரிக்க செய்திருக்கிறார் மதன். இந்த பாடலுக்கு வாத்தியங்கள் வாசிப்பதில் இருந்து கோரஸ் பாடும்வரை அனைத்துமே குழந்தைகளால் கையாளப்பட்டவை.
உலகளவில் பியானோ இசை வாத்தியத்தில் திறன் பெற்ற லிடியன், இந்திய அளவில் புல்லாங்குழலில் புகழ் பெற்ற வர்ஷினி, சிம்போனி இசையில் வயோலின் வாசிக்கும் அன்பு ஆகிய குழந்தைகள் இந்த பாடலுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர்.
பாடலைப் பாடிய சிந்தியா, சஜினி, சாஷ்வின், சினேகா மற்றும் உசீஜா ஆகியோர் பாடலின் மெல்லிசைக்கு தூணாக அமைந்திருக்கின்றனர். இந்த பாடலுக்காக கிளாஸிக்கல் கிட்டார் வாசித்த டெல்சி என்னும் சிறுவன், ஜாஸ் இசையில் கை தேர்ந்தவர் மட்டுமில்லாமல் முன்னணி இசையமைபாளர்களுக்கு இப்போதும் வாசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயதிற்கும் திறமைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை இந்த குழந்தைகள் மூலம்தான் நான் தெரிந்து கொண்டேன்…” என்கிறார் இசையமைப்பாளர் சத்யா.
மக்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கும் ‘உன்னோடு கா’ திரைப்படம் வருகிற மே-13-ம் தேதி, விடுமுறை விருந்தாக வெளியாகவுள்ளது.