சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல ஓவியர் A.P.ஸ்ரீதரின் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான டிரிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை பிரபல இயக்குநர், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் ஊடகங்களின் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஓவியத்தில் தீபத்தை வரைந்து ஏற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “நாம் ஏதாவது புதுமையாக செய்ய முயன்றால் அதை முந்திக் கொண்டு செய்ய இங்கே கமல்ஹாசன், A.P ஸ்ரீதர் போன்ற பல பேர் இருக்கிறார்கள்.
‘நானும் ரவுடிதான்’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை தனியாக எடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ‘தசாவதாரத்தின்’ பல்ராம் நாயுடுவை தனியாகப் பிரித்து ஒரு படமாக்கி கமல் அந்த வேலையை ஆரம்பித்து விட்டார்.
குத்துவிளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் ஓவியமாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இங்கே ஸ்ரீதர் செய்து விட்டார். இந்த ட்ரிக் ஆர்ட் மியூசியம் உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அனுபவம்..” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் “இது போன்ற தந்திரக் கலை ஓவியக் காட்சியகங்கள் உலகம் முழுக்க பனிரெண்டு நாடுகளில் 42 இடங்களில் இருக்கிறது. பார்வையாளரின் பங்களிப்பு இல்லாமல் இவை முழுமை அடையாது. இந்தியாவில் இதுதான் முதல் கண்காட்சியகம். அடுத்து பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களிலும் இதை அமைக்க இருக்கிறேன். இங்கே பெரியவர்களுக்கு கட்டணம் 150 ரூபாய். சிறியவர்களுக்கு 100 ரூபாய்..” என்றார்.