தமிழ் சினிமாவின் பாரம்பரியம்மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று முக்தா பிலிம்ஸ் நிறுவனம்.
கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’, ரஜினிகாந்தின் ‘பொல்லாதவன்’ ஆகிய படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள ‘முக்தா பிலிம்ஸ்’ நிறுவனம், தற்போது ‘வேதாந்த தேசிகர்’ என்ற வரலாற்று பின்புலம் கொண்ட ஒரு படத்தைத் தயாரித்துள்ளது.
ஆன்மிக மகான்களில் தனித்துவமானவர் வேதாந்த தேசிகர். அவரது அறம் சார்ந்த ஆன்மிக சேவையை, வாழ்வை யாருமே இதுவரை திரைப்படத்தில் பதிவு செய்யவில்லை. அதை முதல்முறையாக ‘முக்தா பிலிம்ஸ்’ செய்துள்ளது.
இத்திரைப்படத்தை முக்தா சீனிவாசன் அவர்களின் புதல்வர் முக்தா சுந்தர் இயக்கி இருப்பதோடு படத்தில் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.
இப்படத்தில் வேதாந்த தேசிகராக ஆராய்ச்சியாளரும், உபன்யாசருமான துஷ்யந்த் ஸ்ரீதர் திரைக்கதை எழுதி நடித்துள்ளார். இவர் வேதாந்த தேசிகரின் வாழ்க்கைக் குறிப்புகளை திறம்பட ஆய்ந்தவர். மேலும் இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியான பிராக்ருத மொழியை இப்படத்தில் பயன்படுத்தவும் செய்திருக்கிறார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஏன் என்றால் வேதாந்த தேசிகர் ப்ராக்ருத மொழியில் பாடல் எழுதும் அளவிற்கு பரிச்சயம் உடையவராம்.
துருக்கியர்களின் படையெடுப்பில் இருந்த ஸ்ரீரங்கம் கோவிலை எப்படி வேதாந்த தேசிகர் காத்து நின்றார் என்பதே இப்படத்தின் திரைக்கதை கதை. அதை மிக அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் முக்தா சுந்தர்.
படத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் உடன் ஸ்ருதி பிரியா, ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய அம்சமாக மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் தற்போது தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறதாம். இந்த ஓடிடி தளத்தை இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ் நிறுவனமே உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இது குறித்து தயாரிப்பாளர் முக்தா ரவி பேசுகையில், “இன்று ஆன்மிகத்தைப் பெரிதும் விரும்பும் பெரியவர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிறு சிக்கல் இருப்பதால் இப்படம் நேரடியாக ‘முக்தா பிலிம்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தைப் பார்க்க ‘முக்தா பிலிம்ஸ்’ வெப்சைட்டில் டிக்கெட் புக் செய்யலாம். மேலும் வெளிநாட்டில் இருப்பவர்கள் லாக் இன் செய்து பார்க்கும் வசதியும் இருக்கிறது.
இனிமேல் தொடர்ந்து ‘முக்தா பிலிம்ஸ்’ தயாரிப்பில் வெளியான படங்களையும் இந்த ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளோம். அதோடு, ரிலீசுக்கு தயாராகி வெளியிட முடியாமல் உள்ள சிறு முதலீட்டு படங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம்.
வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் அனைவரும் இந்தப் படத்தை ‘முக்தா பிலிம்ஸ்’ ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம். ஒரு ஆன்மிக அனுபவத்திற்கு தயாராக இருங்கள்…” என்கிறார் தயாரிப்பாளர் முக்தா ரவி.