full screen background image

நடிகை கே.ஆர்.விஜயா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘மூத்தக்குடி’ திரைப்படம்

நடிகை கே.ஆர்.விஜயா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘மூத்தக்குடி’ திரைப்படம்

தி ஸ்பார்க் லண்ட்  நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் ‘மூத்தக்குடி’.  

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான கே.ஆர்.விஜயா இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘சாவி‘ படத்தின் நாயகனான பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். ‘மாயாண்டி குடும்பத்தார்‘ படத்தின் கதாநாயகன் தருண் கோபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா, இயக்கம் – ரவி பார்கவன், இசை – J.R.முருகானந்தம், ஒளிப்பதிவு – ரவிசாமி, படத் தொகுப்பு – வளர் பாண்டி, கதை வசனம் – M.சரக்குட்டி, ஸ்டண்ட் – சரவெடி சரவணன், பாடல்கள் – நந்தலாலா, எஃபெக்ட்ஸ் – சேது, டிசைன்ஸ் – அஞ்சலை முருகன், பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM).

இந்தப் படம் குறித்து இயக்குநர் ரவி பார்கவன் பேசும்போது, “இது நிஜத்தில் நடந்த உண்மைக் கதைதான்.  1970-களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று காலக் கட்டங்களில்நடக்கும் கதை என்பதால் படக் குழு மிகுந்த ஆராய்ச்சி செய்து, அந்தந்த காலக்கட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ளது. அப்போதைய காலக்கட்டத்தை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இப்படம் இருக்கும்.

உண்மை சம்பவத்தை மிக அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளேன். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப் பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளோம். திரையில் நீங்கள் பார்க்கும்போது அந்த காலகட்டத்தில் வாழும் அனுபவத்தை தரும்.

மூத்த நடிகையான கே.ஆர்.விஜயா அம்மா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது, கேரவனே வேண்டாம். படக் குழுவினருடன் இருக்கிறேன் என்று எப்போதும் படப்பிடிப்பில்தான் இருப்பார். எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

நடிகர் தருண் கோபி எதிர் நாயகனாக கலக்கியுள்ளார், அவர் தந்த ஒத்துழைப்பு மிகப் பெரிது. பிரகாஷும் அவரும் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது அவருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால் அப்போதுகூட, படக் குழுவின் சிரமத்தை உணர்ந்து, படப்பிடிப்பை முடித்துவிட்டே சென்றார்.

படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும்  மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். இப்படம் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு நல்ல படைப்பாக, ரசிகனுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்.

‘அசுரன்’ படப்பிடிப்பு நடந்த, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமாம்.

 

Our Score