சுரேஷ் காமாட்சி… தமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு.
‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’ என்ற இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார். அவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு ‘மிக மிக அவசரம்’ என தலைப்பிட்டுள்ளார்.
‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ படங்களில் நடித்த ஸ்ரீஜா(ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார். ‘கோரிப்பாளையம்’ ஹரீஷ், ‘வழக்கு எண் முத்துராமன்’, ஈ-ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீ.கே.சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதை வசனத்தை ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநரான ஜெகன் எழுதியுள்ளார். சுரேஷ் காமாட்சி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு பிரச்சினையை இந்தப் படத்தில் முன் வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுரேஷ் காமாட்சி.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “எனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் – சுரேஷ் காமாட்சி என இப்போது போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் உள்ளே வந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும்கூட. பின்பு காலச் சூழலால் அமரர் மணிவண்ணன் இயக்கிய ‘அமைதிப்படை-2’-க்கு தயாரிப்பாளரானேன்.
‘கங்காரு’ படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை என் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அதைத்தான் ‘மிக மிக அவசரம்’ எனப் படமாக்கியுள்ளேன்.
இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே நல்ல விஷயங்களைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடந்திருக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிகவும் உணர்வுப்பூர்வமான கதை இது. திரைக்கு வரும்போது நிச்சயமாக அதிர்வுகளை ஏற்படுத்தும்.
படப்பிடிப்பு 99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. பாக்யராஜ் சார் ‘பவுனு பவுனுதான்’ படத்தை இங்குதான் எடுத்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன்.
ஹீரோயின் ஸ்ரீஜாவுக்கு இந்தப் படம் வேறு ஒரு தளத்தை உருவாக்கித் தரும் என நம்பலாம். ‘வழக்கு எண்’ முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா, அரவிந்த் என எல்லோருமே பிரமாதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். என் வேலையைச் சுலபமாக்கியிருக்கிறார்கள்.
பெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தானே. அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, அவர்களுக்கு எதிரான சீண்டல்கள், தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே..” என்கிறார் பெருமையுடன்..!