இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல.’
இந்தப் படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக புதுமுகம் அமலா நடித்திருக்கிறார்.
விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. முதல் முறையாக படத்தின் பாடல்களை பென் டிரைவில் வெளிட்டுள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் சார்லி, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர் அசோக் இயக்குநர் பேரரசு, நடிகை ரோகிணி, எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம், கார்த்திக் சுப்புராஜ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்ஸி சண்முகம், கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் ‘ஒரு கனவு போல’ படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் விஷால், “நான் இப்போது நடிகனாகவோ, நடிகர் சங்க செயலாளராகவோ பேசவில்லை. ஒரு மனிதனாக பேசுகிறேன். நெடுவாசல் காப்பாற்றப்பட வேண்டும். இப்போது காப்பாற்ற வேண்டிய விவசாயிகள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி மற்றும் அனைத்து சங்கங்களும் இறங்க இருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். அது சம்மந்தமாக இப்போதுதான் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.
பொதுவாக நான் இசை வெளியிட்டு விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன். இந்த விழாவிற்குத்தான் வந்திருக்கிறேன். நடிகர்கள் சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் அழைத்ததால்தான் வந்தேன். இதைக் கேள்விப்பட்டு நாளைக்கு ஆரியா, ஜெயம் ரவி,கார்த்தி, ஜீவா எல்லோரும் என்னைக் கழுவி, கழுவி ஊத்தப் போறாங்க.
இருந்தாலும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்றால் நடிகர் சங்கம் சார்பான ஏதாவது ஒரு விஷயம் என்றால் செளந்தரும், ராமகிருஷ்ணனும் ஏன், எதற்க என்றுகூட கேட்காமல் ஓடோடி வந்து முன்னால் நிற்பார்கள். இவர்களின் அந்த அர்ப்பணிப்பு குணத்திற்காகவே இந்த விழாவுக்கு நான் வந்திருக்கிறேன்.
சின்ன படம், பெரிய படம் என்று எதுவும் இல்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றி அடைகின்றன. என் படம் வெற்றியடைந்தால் விஷால் மட்டும்தான் பேசப்படுவான் ஆனால் ‘ஒரு கனவு போல’ மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால்தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெற்றி கிடைக்கும்…” என்று வாழ்த்தினார்.