தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’.
இந்தப் படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாகவும், ஸ்வேதா திருப்பதி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராஜு முருகனின் உடன் பிறந்த அண்ணனும், அவரிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான சரவண ராஜேந்திரன், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருடைய முதல் படமாகும்.
இப்படத்தின் ட்ரைலரும், பாடல்களும், படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பாவான ஈஸ்வரன் பேசும்போது, “இந்தப் படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக் கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம்.
படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு காதல் காவியம். இன்று நாட்டில் எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் அதற்கெல்லாம் ஒரு பதிலாக இருக்கும். நிச்சயமாக இந்தப் படம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தயவு செய்து இந்தப் படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காண வேண்டும்…” என்றார்.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா பேசுகையில், “ஞானவேல் ராஜாதான் நல்லா பேசுவார் என்றால் அவரைவிட அவர் அப்பா நன்றாகவே பேசுகிறார். இந்தப் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் சக்திவேலை நான் இரண்டாவது திருப்பூர் சுப்பிரமணியன் என்பேன்.
இந்த ‘மெஹந்தி சர்க்கஸின்’ இன்னொரு நம்பிக்கை என்னவென்றால் ராஜு முருகனின் கதை. இந்தப் படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகிறேன்..” என்றார்.
ஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசும்போது, ” இந்தப் படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் என் கேரக்டர் அப்படி அமைந்துள்ளது.
இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலைதான். அந்தக் கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்…” என்றார்.
இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, “இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார்தான். அவரின் இசைதான் இந்தப் படத்திற்கு இன்புட். என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக்தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியேதான் இருக்கும்.
ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக ‘மெஹந்தி சர்க்கஸ்’ இருக்கும்.
இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப் படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்..” என்றார்.
பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப் படம் சிறப்பாக வந்திருப்பதுதான் அதற்குக் காரணம்.
ரொம்ப சின்ன வயதில் வெட்டாற்றங்கரையில் நான், சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல் இலக்கியம் என்று பேசிக் கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் ‘ராஜு முருகன் கதை எழுதி, நீ பாட்டெழுதி, நான் படம் இயக்கணும்’ என்று கூறினார். அன்று விளையாட்டாக அவர் பேசியது இன்று நிஜமாகியுள்ளது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் ‘இயக்குநர் ரொம்பவே நிதானமானவர்’ என்று சொன்னார்கள். இந்த நிதானம்.. நேர்மையான நிதானம், சத்தியமான நிதானம். இந்தப் படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும்…” என்றார்.
படத்தின் கதாநாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது, “மீடியாவை எப்போதும் சந்திக்கும் வாய்ப்பை இந்தப் படம் எனக்கு ஏற்படுத்தி கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.. எல்லோரும் ‘ஏன் சமையல் பிஸினெஸை விட்டுவிட்டு நடிக்க வருகிறீர்கள்..?’ என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ணவே முடியாது.
என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்றுதான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப் படத்தை வெளியீடும் சக்திவேல் ஸார், ‘இந்தப் படம் நிச்சயமாக ஜெயிக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்…” என்றார்.
படத்திற்குக் கதை, வசனம் எழுதிய இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது, “இந்தப் படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும், ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி.
இந்தப் படம் ரொம்ப எளிமையா,ன நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது.
இந்தப் படத்தில் என் பெயரும் இருக்கிறது. ஆனால் கதையை என் அண்ணனும் நானும்தான் இணைந்து எழுதினோம். இந்தப் படத்தில் அண்ணனின் உழைப்பு மிகப் பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, “இது காதல் படம் என்பதை படத்தின் போஸ்டரே சொல்லி இருக்கும். இந்தப் படத்தில் மூன்று காதல்கள் உள்ளன.
ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள்ளும் உள்ள காதல்தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கும், ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதல்கள்தான் இந்தப் படத்தின் மூலதனம்.
இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த நல்ல படத்தை மீடியாக்கள் நல்லபடியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுகிறேன்..” என்றார்.
இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசும்போது, “எல்லாரும் என்னை ‘நிதானமானவர்’.. ‘பொறுமையானவர்’ என்றார்கள். இது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாகத்தான் இந்தப் படம் வந்துள்ளது.
இந்தப் படத்திற்கு துவக்கப் புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார்.
இந்த ரங்கராஜ் ப்ரதரை முதலில் பார்த்தபோது நாம் எதிர்பார்ப்பதுபோல இவர் நடிப்பாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஆனால் படத்தில் அவர் நாயகன் ‘ஜீவா’வாக வாழ்ந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் செல்வக்குமார். நாங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொள்ளும்போது, ‘அவர் சின்னப் பையனாக இருக்கிறாரே’ என்ற சந்தேகம் எனக்கும், ‘நான் ரொம்ப பெரிய ஆளா இருக்கனே’ என்ற சந்தேகம் அவருக்கும் இருந்தது. பின்பு ஒரு மணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. இணைந்து பணியாற்றினோம்.
ஷான் ரோல்டனை ‘சின்ன இசைஞானி’ என்று சொல்லலாமா என்றுகூட பேசுவோம். அவர் ‘சூப்பர் டீலக்ஸ்’ க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரே ஒரு ட்யூன்தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணி நேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார்.
படத் தொகுப்பாளர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப் பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நாயகியும் மிகப் பிரமாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
இந்தப் படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படத்தைப் பார்த்துவிட்டு ‘படம் நல்லாருக்கு’ என்று சொன்ன பிறகுதான் நான் உயிர்த்தெழுந்தேன்…” என்றார்.
இந்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது.


















