ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘மயூரன்.’
இந்தப் படத்தில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி(லென்ஸ்), அமுதவாணன்(தாரை தப்பட்டை), அஸ்மிதா(மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தில் நடிக்கும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் ‘கூத்துப் பட்டறை’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு – பரமேஷ்வர், இசை – ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் – குகை மா.புகழேந்தி, படத் தொகுப்பு – அஸ்வின், கலை இயக்கம் – M.பிரகாஷ், சண்டை இயக்கம் – டான் அசோக், நடன இயக்கம் – ஜாய் மதி, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M.P.கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன்.
இவர் இயக்குநர் பாலாவிடம் ‘நந்தா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன் பேசும்போது, “நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.
கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல; அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்லவிதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம் அது.
சாதாரண கூழாங்கற்கள், வைரக் கற்களாகவும் வைரக் கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம்.
அங்கு ஏற்படும் சில பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும் படம்தான் இந்த ‘மயூரன்’.
‘மயூரன்’ என்றால் ‘விரைந்து உன்னை காக்க வருபவன்’; ‘வெற்றி காண்பவன்’ என்று பொருள்.
சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்து கொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர் கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதுதான் இந்த ‘மயூரன்’ படத்தின் கதைக் கரு.
மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் அவன் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது பல்வேறு சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது.
ஒரு அருமையான கதை களத்தில், விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் நந்தன் சுப்பராயன்.