ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘மரகத நாணயம்’.
‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கியிருக்கும் இந்த ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில் நடிகர் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ் மற்றும் கலை இயக்குநர் என்.கே.ராகுல் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘மரகத நாணயம்’ படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
“இதுவொரு பேண்டசி, அட்வென்ச்சர், காமெடி கலந்த கதை. 1100, 1992, 2016 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் இந்தப் படம் நிகழ்கிறது. காஸ்ட்லியான ஒரு மரகத நாணயத்தைத் தேடும் படலம்தான் படத்தின் திரைக்கதை. ஹீரோ ஆதி டீமும், வில்லன் ஆனந்தராஜ் டீமும் இந்த மரகத நாணயத்தை மும்முரமாகத் தேடுகிறது. இறுதியில் அது யாருடைய கையில் கிடைக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
அந்த நாணயத்துக்குள் அதிர்ஷ்டம், அமானுஷ்யம் எல்லாமும் அடங்கியிருக்கிறது. அது இருக்கிற இடத்தில் பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அவ்வளவு ஆபத்தான அதனை பணத்துக்காக அடைய முயற்சித்து இதனால் இவர்கள் பாடு என்னவாகிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி கொஞ்சம் கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன். ஹீரோயின் நிக்கி கல்ரானிக்கு இதில் முக்கியமான வேடம். அவர்தான் ஆவியா.. அல்லது பேசத் தெரிந்தவரா என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ்.
ரசிகர்கள் இதுவரை ஆதியை ஒரு அதிரடி நாயகனாகத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் எங்களின் இந்த ‘மரகத நாணயம்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆதியை அவர்கள் காண இருக்கிறார்கள்..” என்கிறார் ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.கே.சரவண்.
“எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தை பொறுத்தவரை கதைதான் ஹீரோ. வலுவான கதைக் களங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே நாங்கள் தேர்வு செய்து தயாரித்து வருகிறோம். வெறும் லாபம் சம்பாதிப்பதில் மட்டுமில்லாமல், தரமான திரைப்படங்களின் அற்புதத்தை ரசிகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதில்தான் எங்களுக்கு நாட்டம் அதிகம்.
அதனை எங்கள் ‘மரகத நாணயம்’ திரைப்படம் உறுதிப்படுத்தும். 90 கதைகளை கேட்டு, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கதைதான் இந்த ‘மரகத நாணயம். இந்தப் படத்தை தமிழில் மட்டுமல்ல; தெலுங்கிலும் வெளியிடப் போகிறோம்…” என்கிறார் தயாரிப்பாளரும், ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனருமான ஜி.டில்லிபாபு.
“திரைப்படங்களில் பொதுவாக இருக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் மசாலா காட்சிகள் இந்த படத்தில் இருக்காது. ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் நொடிவரை, ரசிகர்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதப்பார்கள். இதுவரை யாரும் பார்க்காத நகைச்சுவை பாணியை நாங்கள் எங்களின் ‘மரகத நாணயம்’ படத்தில் உள்ளடக்கியிருப்பதே அதற்கு காரணம். என்னுடைய புதிய அவதாரத்திற்கு பிரகாச வெளிச்சத்தை இந்த ‘மரகத நாணயம்’ ஏற்படுத்தி தரும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் படத்தின் கதாநாயகன் ஆதி.