நேற்று இரவு அவினாசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த CJS – BSS வண்டி எண் TN 37 AH7997 என்ற எண்ணுடைய தனியார் பேருந்தில் சமீபத்தில் வெளியாகி இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மனிதன்’ திரைப்படம் ஒளிபரப்பானதாம்.
இதைப் பார்த்த பயணி ஒருவர் அங்கிருந்தபடியே நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு இதைத் தெரியப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து தலைவர் விஷால் மற்றும் பொருளாளர் ‘கார்த்தி’ ஆகியோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமனின் மேற்பார்வையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமியின் உத்தரவின்படி, காவல் துறை ஆய்வாளர்கள் மகேந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயலுக்கு விரைந்து சென்று பேருந்தை மடக்கி பிடித்தனர்.
மேலும் பேருந்தை அயனாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தனியார் பேருந்தில் புதிய படம் ஒளிபரப்பாகி பிடிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் ஒரு தனியார் பேருந்தில் ‘தெறி’ படம் திரையிடப்பட்டு அதுவும் காவல் துறையினரால் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.









