மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லாலும், மம்முட்டியும் நடிக்க வந்த துவக்கத்தில் இருந்து 85-கள்வரையிலும் 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு சிற்சில படங்களில் மட்டுமே இணைந்து நடித்தார்கள்.
இதற்குப் பிறகு ஜோஷியின் 'நம்பர் 20 மெட்ராஸ் மெயில்' படத்தில் மம்முட்டி நடிகர் மம்முட்டியாகவே மோகன்லாலுடன் நடித்திருந்தார். பிரியதர்ஷன் இயக்கத்தில் 'ராதாகிருஷ்ணன்' படத்தில் இருவரும் வக்கீல்களாக நடித்திருந்தனர். இதற்குப் பிறகு சமீபத்தில் 'அம்மா' அமைப்பின் நல நிதிக்காக ஜோஷி இயக்கத்தில் 'டிவென்ட்டி டிவென்ட்டி' படத்தில் நடித்திருந்தனர்.
இப்போதும் அவரவர் பிராஜெக்ட்டுகளில் மும்முரமாக இருந்து வருகிறார்கள்.. மோகன்லாலுக்கு 'திரிஷ்யம்' பம்பர் பிளாஸ்ட்டாக இருந்துவிட.. மோகன்லால் வேறு பக்கம் மும்முரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் மீண்டும் மம்முட்டி, மோகன்லாலை வைத்து படம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்தப் படம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் துவங்குமாம்.. 2015-ம் ஆண்டில் மலையாளப் படவுலகில் மெகா ஹிட் படமாக இது இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரியதர்ஷன்.
பிரியதர்ஷன் இப்போது ஜெயசூர்யாவை வைத்து ஆமையும், முயலும் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இது முடிந்தவுடன் இந்த சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் படம் துவங்குமாம்..!
கேட்பதற்கே இனிக்கிறது.. இதுபோல தமிழிலும் நடந்தால் எப்படியிருக்கும்..?