‘மாநாடு’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’ மாநாடு’ படம் வழமையான சிம்புவின் படம் போல பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் தாண்டி தயாராகிக் கொண்டிருக்கிறது.
நவராத்திரி பண்டிகை தினத்தில் படம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில் தற்போது திடீரென்று தீபாவளி ரேஸில் இந்தப் படம் குதித்திருக்கிறது.
ஏற்கெனவே தீபாவளியன்று ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. கூடவே அஜீத்தின் ‘வலிமை’யும் அன்றைக்கே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்களுடன் சிம்புவும் போட்டிக்கு வருகிறார் என்பது ஆச்சரியமாகத்தின் இருக்கிறது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதில், “நிறைவான மகிழ்வில் ‘மாநாடு’ படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக் கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது தயாரிப்பாளரின் விருப்பமா அல்லது நாயகன் சிம்புவின் விருப்பமா என்று தெரியவில்லை. ஆனால் ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.
ஏனெனில் ‘அண்ணாத்த’யும் ‘வலிமை’யும் போட்டியென்றாலே தமிழகத்தின் முன்னணி திரையரங்குகள் அனைத்தும் இவற்றிற்கே புக் ஆகிவிடும். பின்பு ‘மாநாடு’ படத்திற்கு ஒரு காட்சி, ஒரு தியேட்டர் போன்றுதான் கிடைக்கும். இவையே ‘மாநாடு’ படத்தின் தயாரிப்புச் செலவை ஈடு கட்ட முடியுமா என்று தெரியவில்லை.
ஒருவேளை ‘வலிமை போட்டிக்கு வராமல் நவராத்திரிலேயே தனித்து களத்தில் இறங்கிவிட்டால் நிச்சயமாக ‘மாநாடு’ மாநாடாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இது எல்லாமே இப்போது ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரின் கைகளில்தான் உள்ளது.