full screen background image

கலைஞர் டிவியில் ல‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி ‘நேர் கொண்ட பார்வை’

கலைஞர் டிவியில் ல‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி ‘நேர் கொண்ட பார்வை’

வெள்ளித்திரையில் தனது நடிப்பு மற்றும் இயக்கத்தாலும், சின்னத்திரையில் தனது பேச்சாலும் மக்கள் மனதில் பதிந்தவர் இயக்குநரும், நடிகையுமான ல‌ஷ்மி ராமகிருஷ்ணன். சமீப ஆண்டுகளில் கலைத் துறையையும் தாண்டி சின்னத்திரையின் மூலம் தமிழ் குடும்பங்களில் ஒருவராகவே மாறிவிட்டார் லஷ்மி ராமகிருஷ்ணன்.

சமீபகாலமாக, சின்னத்திரையில் இருந்து சற்றே விலகி இருந்த இவர், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தனது புதிய அத்தியாயத்தை துவங்கவிருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பாக ‘நேர்கொண்ட பார்வை’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

தவறுகள்தான் குற்றங்களுக்கு காரணம். நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள்கூட பின்னாளில் நமது வாழ்க்கையையே புரட்டி போடலாம். குற்றம் செய்யும் யாரும் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை. தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே முயல்கின்றனர். இதை முன் மாதிரியாக வைத்தே, சமுதாயத்தில் குற்றங்கள் பெருகி வருகின்றன.

NKP-5

இவ்வாறான சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வர உருவாக்கப்பட்டுள்ள ஒரு மேடைதான் ‘நேர்கொண்ட பார்வை’.

இந்த நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 17-ம் தேதி முதல், வாரத்தில் திங்கள் முதல் வியாழன்வரை  இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

சமீப காலமாக முன்னணி தொலைக்காட்சிகளுடன் போட்டியிடும்வகையில் புதிய, புதிய நிகழ்ச்சிகள், தொடர்களை தயாரித்து வழங்கி வரும் கலைஞர் தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய ஹிட்டை கொடுக்கக் காத்திருக்கிறது ‘நேர் கொண்ட பார்வை’ நிகழ்ச்சி..!

Our Score