‘குற்றம் கடிதல்’ படம் தொடர்பாக முதல் தயாரிப்பாளர் கிறிஸ்டிக்கும், அதன் பின்பு படத்தின் நெகட்டிவ் உரிமையை வாங்கியிருக்கும் ஜே.சதீஷ்குமாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில மீடியாக்களில் செய்திகள் பரவியிருந்தன.
‘அவையெல்லாம் ஆதாரமற்ற வதந்திகள்’ என்று ஒரு வாரம் கழித்து இன்றைக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளரின் கிறிஸ்டி.
அவருடைய அறிக்கை இதுதான் :
“ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
எனக்கும் என் நண்பரும், தயாரிப்பாளருமான திரு.ஜே.சதிஷ் குமாருக்கும் ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் தொடர்பாக மன கசப்பு என்று வரும் செய்திகள் முற்றிலும் உன்மைக்கு புறம்பானவை. இந்த அறிக்கையே அந்தப் புரளியை நிராகரிக்க கோரிதான்.
‘குற்றம் கடிதல்’ படக் குழுவினர் சார்பாக நான் கூறுவது என்னவென்றால், ‘நாங்கள் எப்பொழுதுமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். தேசிய விருது விஷயத்தில் மட்டுமல்ல, இந்தத் திரைப்படம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் ஒருமித்த சிந்தனையில்தான் தயாரிப்பாளர்கள் ஆகிய நானும், திரு.சதீஷ் அவர்களும் செயல்படுகிறோம்.
‘குற்றம் கடிதல்’ படத்தின் உலக எதிர்மறை உரிமை [World Negative rights] வெளியீட்டு உரிமையை திரு.ஜே.சதீஷ் குமார் வாங்கும்போதே, இந்தத் திரைப்படத்தை எந்தெந்த விருதுகளுக்கு அனுப்ப வேண்டும்..? எந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.
அந்த தெளிவும், உறுதியும், அதனுடன் அவருக்கு உள்ள அனுபவமும் எங்கள் படக் குழுவினருக்கு மிக பெரிய வழிகாட்டியாக இருந்தது என்றால் அது மிகையாகாது. இந்த கூட்டு முயற்சியே எங்களுக்கு இந்த அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் தந்தது என்பதே உண்மை.
இதை மனதில் கொண்டு ஆதாரம் இல்லாமல் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்பவும் வேண்டாம், பிரசுரிக்கவும் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
பத்திரிகை நண்பர்களை நான் வேண்டிக் கேட்டு கொள்வது என்னவென்றால், ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு தாங்கள் நல்கி வரும் ஆதரவை பேராதரவாக மாற்ற வேண்டும்.
இதன் மூலம் எங்களைப் போன்ற தரமான படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளர்கள் பெருகுவார்கள். தரமான, சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய திரைப்படங்களை தயாரிக்கும் புதியத் தயாரிபாளர்களுக்கு உங்கள் ஆதரவே ஊக்கமும் உற்சாகமும் தரும்.”
– இவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.