நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஈரம் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ‘குற்றம்-23’ படத்தினை அருண் விஜய்யின் நண்பரான இந்தெர் குமார், தன்னுடைய ரெதான் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படம் பற்றிப் பேசிய நடிகர் அருண் விஜய், “ஒரு தரமான திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு. நல்லதொரு கதைக் களமும், அந்த கதைக் களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.
சமீபத்தில் ‘குற்றம் 23’ படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த எங்கள் இருவருக்கும், எங்களின் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. அப்படியொரு பேசா மடந்தை நிலைமைக்குத் தள்ளப்பட்டோம்.
இயக்குநர் அறிவழகன் தற்போது செதுக்கியிருக்கும் இந்த ‘குற்றம் 23’ படத்தின் காட்சிகள் அனைத்தும், அற்புதமான முறையில் உருவாகி நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் மிக பிரமாதமாக வந்திருப்பதை பார்த்து, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார்.
ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்பிற்கு, தற்போது பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னை பாராட்டியபோது எனக்கு மிக உற்சாகமாக இருந்தது.
‘குற்றம்-23’ படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இன்றுவரை ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்தி வருகிறார் இந்தெர் குமார். அவரது சிறப்பான பணி ‘குற்றம்-23’ படத்தை விளம்பரம் செய்வதிலும், வெளியிடுவதிலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…..” என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் நடிகர் அருண் விஜய்.












