full screen background image

“ஹீரோயின் பக்கத்துல உக்கார வைச்சதால கடைசிவரைக்கும் இருப்பேன்” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் கிண்டல்!

“ஹீரோயின் பக்கத்துல உக்கார வைச்சதால கடைசிவரைக்கும் இருப்பேன்” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் கிண்டல்!

ராயல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.குமாரதாஸ் தயாரித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான் விஜய், பருத்தி வீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் ; T.குமாரதாஸ், இயக்குநர் ; கெவின் ஜோசப், இசை – ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி, படத்தொகுப்பு – T.S.ஜெய், ஒளிப்பதிவு – பிரசாத் ஆறுமுகம், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், நடன இயக்கம் – ராஜு முருகன், பாடகர்கள் – அந்தோணிதாசன், ஐஸ்வர்யா, சாய்சரண், பாடல்கள் – வினோதன்,  அருண்பாரதி, சீர்காழி சிற்பி, எபெக்ட் – ராண்டி, மிக்சிங் ; கிருஷ்ணமூர்த்தி, பத்திரிக்கை தொடர்பு ; ரியாஸ் K.அஹ்மத்.

இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சக்தி, நடிகர்கள் அப்புக்குட்டி. ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன், ஜெயிலர் கலையரசன், ராட்சசன் சரவணன் மற்றும் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் ‘லொள்ளு சபா’ புகழ் நடிகர் ஜீவா பேசும்போது, “இந்தப் படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறார்கள் என்பது படத்தின் ட்ரெய்லரையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. சிறிய படமாக இருந்தாலும் நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்தால் வெற்றி நிச்சயம்” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “கும்பாரி’ என்பதன் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. இங்கே வந்த பிறகுதான் ‘கும்பாரி’ என்றால் நட்பு என அர்த்தம் இருப்பது தெரிய வந்தது. மற்ற எந்த உறவுகளும் பந்தத்தோடு தொடர்பு கொண்டது. நட்பு மட்டும்தான் எந்தவித பந்தமும் இல்லாமல் வரக் கூடியது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது, “இந்தப் படத்தின் பாடல்களை பார்த்துவிட்டு பிறகு ட்ரெய்லரை பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியையும் தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் நாயகன் விஜய் விஷ்வா மட்டுமல்லாமல் இனிகோ பிரபாகர், சௌந்தரராஜன் என எல்லோருமே என்னுடன் அடிக்கடி விவாதத்தில் இருப்பவர்கள்தான்.

இவர்கள் போன்ற இளம் நடிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்களை தேடி வரும் வாய்ப்பை தயவு செய்து மிஸ் பண்ணாதீர்கள். உங்கள் முகத்தை மக்களிடம் பதிவு செய்து கொண்டே இருந்தால்தான் மக்கள் உங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நடிகர் விக்ரம் 16 வருட போராட்டத்திற்கு பிறகுதான் ‘சேது’ என்கிற படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார். உங்களுக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு ‘சேது’ திரைப்படம் அமையும்.

இது போன்று இசை வெளியீட்டு விழாவிற்கு வருபவர்கள் இசை தொடர்பாகவும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டுமே பேசினால் அந்த கலைஞர்களை பற்றி வெளியே தெரியும். அதை தவிர்த்து சமூக நீதி போராளிகளாக, பொதுவுடமை சிந்தனை கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்கு சில பேர் இது போன்ற விழாக்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கு வேறு மேடைகள் இருக்கின்றன.. அங்கே உங்களுடைய சமூக நீதி கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “படத்தின் நாயகன் விஜய் விஷ்வாவுடன் எனக்கு பல வருட நட்பு உண்டு. இருவரும் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் ‘டூரிங் டாக்கீஸ்’ என்கிற படத்தில் இணைந்து நடித்தோம்.

அப்போது எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்து நடித்த விஜய் விஷ்வா, பாடல் காட்சிகளில் குறிப்பாக கதாநாயகியுடனான நீச்சல் குளம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அதிக டேக்குகள் வாங்கினார். இங்கே இந்த படத்திலும் அப்படி ஒரு பாடல் காட்சியை பார்த்தேன். ஆனால் நீங்கள் ஒரே நாளில் இந்தக் காட்சியை படமாக்கி உள்ளீர்கள் என்று கூறும்போது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.

நடிகர் சௌந்தர்ராஜா பேசும்போது, “நானும் விஜய் விஷ்வாவும் இணைந்து ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. ஆனால் பல சமூகப் போராட்டங்களில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம்” என்றார்.

நடிகர் பிரஜன் பேசும்போது, “நானும் விஜய் விஷ்வாவும் தற்போது தரைப்படை என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளோம். பெரிய படங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு தேவையில்லை. சிறிய படங்களுக்குத்தான் ஆதரவு தர வேண்டும். வளர்ந்து வரும் நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பதுடன் தங்களது கெட்டப்புகளை மாற்றுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் தங்கள் முகத்தை தொடர்ந்து மக்களிடம் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி பேசும்போது, “நானும்  விஜய் விஷ்வாவும் மாயநதி என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளோம். அப்போது ஒரு கிராமத்தில் இருந்த குளம் சுத்தம் இல்லாமல் இருந்ததை பார்த்துவிட்டு அதனை புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் அதன் அவல நிலை குறித்து பதிவிட்டு விட்டார் விஜய் விஷ்வா. இதை பார்த்துவிட்டு அந்த ஊர்க்காரர்கள் சிலர் அவரை தேடி வந்து விட்டனர். அந்த அளவிற்கு சமூக பொறுப்பு கொண்டவர்” என்று பாராட்டினார்.

நடிகரும், இயக்குநருமான சரவண சக்தி பேசும்போது, “இந்தப் படத்தில் இவ்வளவு முத்த காட்சிகள் இருந்தும் எப்படி யு சான்றிதழ் கொடுத்தார்கள் என அருகில் இருந்த நண்பர் கேட்டார். முத்தக் காட்சிகளை தற்போது ‘யு’வில் சேர்த்து விட்டார்கள் போல என்று நான் கூறினேன். இது போன்ற சின்ன படங்களுக்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும். சமீபத்தில் வெளியான ஒரு பெரிய படத்திற்கு சில யூடியூப் சேனல்களில் எதிர்மறை விமர்சனம் அளித்துள்ளார்கள். ஆனால் படம் நன்றாக ஓடுகிறது” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் T.குமாரதாஸ் பேசும்போது, “இது நட்பு சம்பந்தப்பட்ட படம்.  காதல், காமெடி, இசை என எல்லாமே நன்றாக வந்துள்ளது. சின்ன படம் என ஒதுக்கி வைக்காதீர்கள். சின்ன படங்கள் மூலம்தான் பெரிய ஆட்கள் உருவாகியுள்ளனர். அன்று ஒரு சின்ன படத்தில் நடித்த சிவாஜிராவ்தான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியுள்ளார்” என்றார்.

நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எப்போது யாரிடம் பேசினாலும்  சாப்பிட்டீர்களா என்றுதான் முதலில் கேட்பார். அந்த அளவிற்கு எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டார். இந்தப் படத்தின் கதை கடலும், கடல் சார்ந்தும் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ரொம்ப வேகமாகவே முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளர் பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆரம்பத்திலேயே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது ‘தரைப்படை’, ‘பிளாஷ்பேக்’, ‘பிரம்ம முகூர்த்தம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வாய்ப்புகள் நன்றாகவே கிடைக்கிறது. ஆனால் இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமும் இருக்கிறது” என்றார்.

இன்னொரு நாயகனாக நடித்துள்ள நலீம் ஜியா பேசும்போது, “சினிமாவில் எனக்கு இது முதல் படம். இதற்கு முன்பு மலையாளத்தில் ஆசியா நெட் சேனலில் ஒரு சீரியலில் கிட்டத்தட்ட 920 எபிசோடுகள் கதாநாயகனாக நடித்துள்ளேன். சினிமா எப்படி இருக்கும் என்கிற ஆர்வத்தில்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் நினைத்து வந்ததைவிட இங்கே சினிமா இன்னும் பயங்கரமாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “சமீபகாலமாக நட்பு பற்றி படம் எடுப்பது என்பதே குறைந்து வருகிறது. காரணம் நட்பே குறைந்து வருவது போல இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் நட்பை முன்னிலைப்படுத்தி படம் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது.

இந்த விழா சற்று தாமதமாக ஆரம்பித்ததால் பசி எடுத்தது உண்மைதான். அதே சமயம் இங்கே திரையிடப்பட்ட பாடல் காட்சிகளில் முத்தக் காட்சியை பார்த்ததும் பாதி பசி பறந்து விட்டது. இந்த விழா மேடையில் நாயகியின் அருகில் அமர எனக்கு இடம் கிடைத்ததும் மொத்த பசியும் போய்விட்டது.

இதுவரை எந்த விழாக்களிலும் கதாநாயகியின் அருகில் நான் அமர்ந்தது இல்லை. அதனால்தான் இந்த விழாவில் பாக்யராஜ் முதலில் பேசுவதாக கூறி கிளம்பி சென்றாலும் நான் கடைசிவரை இந்த நிகழ்வில் இருக்கிறேன் என்று உட்கார்ந்துவிட்டேன்.

இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. படத்தின் நாயகி பேசும்போது இசையமைப்பாளர்களின் பெயர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறினார். அவர்கள் இசையமைத்த பாடல்களில்தான் நீங்கள் சினிமாவில் முகம் காட்டி பிரபலமாகிறீர்கள். நிச்சயம் அவர்களின் பெயரை தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்” என்கிற ஒரு சிறிய அறிவுரையையும் கொடுத்தார்.

Our Score