full screen background image

நடிகை கடத்தப்பட்ட வழக்கு-நடிகர் திலீப்பிற்கு சிக்கல் கூடுகிறது..!

நடிகை கடத்தப்பட்ட வழக்கு-நடிகர் திலீப்பிற்கு சிக்கல் கூடுகிறது..!

“நடிகை கடத்தப்பட்ட வழக்கில் எனக்கு எதிராக போலீஸ் சதி வேலை செய்கிறது” என்றும், “இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்றும் கூறி மலையாள நடிகரான திலீப், கேரள போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார்.

2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதியன்று கேரளாவில் பிரபலமான நடிகை ஒருவர் நள்ளிரவில் சிலரால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

இந்த வழக்கின் பின்னணியில் இருந்ததாகக் கூறி பிரபல மலையாள நடிகரான திலீப்பும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை தற்போது எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரும் 2022 பிப்ரவரிக்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அவர் உள்பட சிலர் அந்த காட்சிகளை பார்த்தது தனக்கு தெரியும் என்று நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் சென்ற வாரம் வெளிப்படையாக மீடியாக்களிடம் புகார் கூறினார்.

பாலச்சந்திர குமாரின் இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் தரப்பிலும், விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் திலீப், கேரள டிஜிபி அனில் காந்திடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “நடிகை பலாத்கார வழக்கில் என்னை சிக்க வைக்க போலீஸ் முயற்சிக்கிறது. பாலச்சந்திரன் கூறியதாக வெளியான தகவலின் பின்னணியில் போலீசார்தான் உள்ளனர். இதன் மூலம் எனக்கு எதிராக போலீஸ் சதி வேலை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் டி.எஸ்.பி. பைஜு பவுலோஸ்தான் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளார். எனவே அவரது போன் அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் விவரங்களை பரிசோதிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்…” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாலச்சந்திர குமாரின் புகார் தொடர்பாக நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் மீண்டும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். இது கேரளத் திரையுலகத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Our Score