full screen background image

‘வலிமை’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது..!

‘வலிமை’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது..!

எதிர்பார்த்ததுபோலவே ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதலின் மூன்றாவது அலையாக தற்போது ‘ஓமிக்ரான்’ என்ற வைரஸின் தாக்குதல் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்திலும் வைரஸ் தாக்குதலில் சிக்கியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி சினிமா தியேட்டர்களில் 50 சதவிகிதம் பார்வையாளர்களுக்குத்தான் அனுமதி. இன்று இரவு முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்.. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவித்துள்ளதால் திரைப்படத் துறை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

50 சதவிகிதம் பார்வையாளர்களுக்குத்தான் அனுமதி என்பதிலேயே பெரிய பட்ஜெட் படங்களுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கினால் சினிமா தியேட்டர்களில் செகண்ட் ஷோ ரத்து செய்யப்படுவதால் அதிலும் ஒரு அடி விழுந்தது. மேலும் அனைத்து ஷோக்களும் நிச்சயமாக ஹவுஸ்புல்லாகும் வாய்ப்புள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் வசூல் மொத்தமாகப் பாதிக்கப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய மிகப் பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடு நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் வெளியீடும் காலவரையின்று ஒத்தி வைக்கப்படுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்தாண்டு பொங்கல் தினத்தன்று சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கொரோனா என்னும் அரக்கன் இன்னும் என்னென்ன இம்சைகளைக் கூட்டப் போகிறானோ தெரியவில்லை..!

Our Score