கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து மனோரமாவின் மறைவு குறித்து தெரிவித்த இரங்கல் செய்தி இது :
“மனோரமா ஒரு மனோரஞ்சிதப் பூ. மனோரஞ்சிதப் பூவுக்குத்தான் ஒரு வித்தியாசமான குணநலம் உண்டு. அதாவது, நாம் எந்த பூவை மனதில் நினைத்துக் கொண்டு மனோஞ்சித பூவை நுகர்கிறோமோ, அது அந்த பூவின் வாசனத்தை அப்படியே வெளிப்படுத்தும்.
அதேபோல், மனோரமா, நாம் ஒரு நகைச்சுவை நடிகையாக பார்த்தோமானால், அவர் அதைப் போலவே பளிச்சிடுவார். ஒரு குணச்சித்திர நடிகையாக பார்த்தால், அதைப்போல் அப்படியே பளிச்சிடுவார். இதுபோல், எந்த மாதிரி அவரைப் பார்த்தாலும், அந்த பாத்திரமாகவே அவர் காட்சியளிப்பார்.
மனோரமா, பெரிய வரலாற்றுக்குக் சொந்தக்காரர். இந்த பெருமை வேறு எந்த நடிகைக்கும் கிட்டியதில்லை.
மனோரமாவின் மறைவு தமிழ் திரையுலகுக்கு ஒரு மறைவு. என்னைப் பொறுத்தவரை ஒரு பாடகி மறைந்துவிட்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
மனோரமா 4 தலைமுறை நடிகர்களுடன் பழகி வந்திருக்கிறார். ஆனால், அவர் யாரையும் புறம் பேசியதில்லை. யாரையும் சிறுமைப்படுத்தியதில்லை. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
யாரும், யாரையும் புறம் பேசாதீர்கள், சிறுமைப்படுத்தாதீர்கள். அவரவருக்கு தெரியும், தங்களது வாழ்க்கை இதுதான் என்று. அப்படியிருக்கும்போது யாரையும் புறம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை. இதைத்தான் மனோரமா நமக்கு எல்லாம் விட்டுச் சென்ற பாடமாக நாம் எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும்..”