சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் போரை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’.
‘மேதகு-(பார்ட்-1)’ படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழத் தமிழர் வரலாற்றை தெளிவாக படம் பிடித்து உலகக் தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டுதான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
நடிகர் கருணாஸ் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – கருணாஸ், இணை தயாரிப்பு – நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார், இயக்கம் – கிட்டு, ஒளிப்பதிவு – சிபி சதாசிவம், இசை – கென் & ஈஸ்வர், படத் தொகுப்பு – சி,எம்.இளங்கோவன், கலை இயக்குநர் – முஜிபூர் ரஹ்மான், சண்டை இயக்கம் – சரவெடி சரவணன் & பிரபாஹரன் வீரராஜ், வி.எப்.எக்ஸ். – சதீஷ் சேகர், திரை வண்ணம் – விநாயகம், ஒலிக் கலவை – S.T.P.சாமி, மக்கள் தொடர்பு – A.ஜான்.
போர்க் களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில்கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும். முதன்முறையாக இந்தப் படத்திற்காக பதுங்கு குழிக்குள் மருத்துவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கின்றனர். இதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
இந்தப் படத்தின் டீஸரை நேற்று கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வெளியிட்டார்.
தற்போது டீஸர் வெளியாகியுள்ள நிலையில் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.