ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால், தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிக பிரமாண்டமான படமாக ‘கத்தி சண்டை’ படத்தையும் தயாரிக்கிறார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் வடிவேலு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சூரியும் நகைச்சுவையில் ஜோடி சேர்கிறார். கதாநாயகியாக தமன்னா முதல் முறையாக விஷால் ஜோடியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ஹிப்ஹாப் தமிழா, கலை – உமேஷ், ஸ்டண்ட் -தளபதி தினேஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுராஜ், தயாரிப்பு – எஸ். நந்தகோபால்.
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால், “இது எனக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் படம் இது. ஒன்பது வருடங்களுக்கு மும்பு ‘திமிரு’ படத்தில் இணைந்து நானும் வடிவேலுவும் வெற்றி பெற்றோம். இந்த படத்தில் மீண்டும் இணைகிறோம். அவரது காமெடியை நானும் ஒரு ரசிகனாக கண்டுகளிக்க காத்துக் கொண்டிருகிறேன்…” என்றார்.
விழாவில் நடிகர் வடிவேலு பேசும்போது, “இனி ரெண்டு டிராக்தான்.. ஹீரோவா வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்.. இனி நிறைய படங்களில் காமெடி வேடம் படம் முழுக்க வர்ற மாதிரி நடிக்கவுள்ளேன். சுராஜ் நமக்கு ஏற்றதுபோல் நிறைய தீனி போடுவார். அதனால் நம்பிக்கையோடு நடிக்கிறேன். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்…” என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, “ஒரு நல்ல டீம்ல நானும் இருக்கேன். ஏற்கனவே சுராஜ் இயக்கத்தில் ‘அப்பாடக்கர்’ படத்தில் நானும் நடித்தேன். இந்த படத்தில் நானும் இணைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி..” என்றார்.
விழாவில் இயக்குநர் சுராஜ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் ஆகியோரும் பேசினார்கள்.