full screen background image

“குப்பை படத்துக்கெல்லாம் 1000 ரூபா செலவு பண்றாங்க” – இயக்குநர் தங்கர்பச்சானின் கோபம்!

“குப்பை படத்துக்கெல்லாம் 1000 ரூபா செலவு பண்றாங்க” – இயக்குநர் தங்கர்பச்சானின் கோபம்!

வாவ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தியின் தயாரிப்பில் இயக்குநர் தங்கர்பச்சானின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல், பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு நானே ஒரு உதாரணம்தான்.

முதலில் படம் இயக்கினேன். பின்பு தயாரித்தேன். அப்புறம் படங்களை விநியோகம் செய்தேன். இப்போது இந்த வயதில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர்பச்சான் மாதிரி பெயரை மட்டும் சம்பாதிக்கவில்லை.

அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத்தான் படம் எடுப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில், இந்தப் படத்தில் நடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

நானும், பாரதிராஜாவும் ஒரே காலகட்டத்தில், ஒரே ஊரில் இருந்துதான் இந்த சினிமாவிற்குள் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார்.

விஜய்யை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். “என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குநர்தானே. நீயே இயக்கிக் கொள்..” என்று சொல்லி மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. ஆனால், தங்கர்பச்சான் எங்கள் இருவரையும் இந்த ஒரு படத்தில் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார்.

இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் டெல்லி கணேஷ் பேசும்போது, “இங்கே எனக்கு முன்பாகப் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அருமையாக பேசிவிட்டார். இதற்கு மேல் நான் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

இந்த விழாவிற்கு தங்கர்பச்சான் என்னை அழைத்தார். அதனால் வந்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இயக்குநர்கள். இவ்வளவு பெரிய ஜாம்பாவான்களின் இடையில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் கோபக்காரர். தன்னுடைய கருத்தில் இருந்து சிறிதும் மாற மாட்டார். இப்படத்திற்காக பல சிறந்த இடங்களைத் தேடி பிடித்து எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அதிதி பாலனுக்கு அப்பாவாக நான் நடித்திருக்கிறேன். ஒரு காட்சியில் நான் ஒரு தப்பு செஞ்சிருவேன். அப்போது வசனமே இல்லாமல் அதிதி தன் பார்வையிலேயே அர்த்தத்தோடு நடித்திருக்கிறார்.

“உன்னை வைத்தே ஒரு படம் எடுக்க வேண்டும்” என்று என்னிடம் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியிருக்கிறார். அது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நான் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். ஏனெனில் நான் சினிமாவை நேசிப்பவன்..”  என்றார்.

இயக்குநர் கவுதம் மேனன் பேசும்போது, “தங்கர்பச்சான் கேட்டு என்னால் ‘நோ’ சொல்ல முடியாது. பாரதிராஜா சார்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார். நடிப்பதைவிட இயக்குவதுதான் சுலபம்.

இந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் புதுவிதமாக நடித்திருக்கிறேன். நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன். ஆனால், யோகிபாபுவுடன் காட்சிகள் இல்லாததில் வருத்தமாக இருந்தது. அடுத்த படத்தில் அவருடன் நடிப்பது குறித்து பேசியிருக்கிறேன்.

இந்த படத்தில் அனைவருக்குமே ஒரு தேடல் இருக்கும். பாரதிராஜா சாருக்கு ஒரு தேடல் இருக்கும், அதிதி பாலன் ஒரு விஷயமாக தேடிக் கொண்டிருப்பார். நான் ஒன்றை தேடிக் கொண்டிருப்பேன். பாரதிராஜா சாருக்கு மகனாக நடித்திருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் பாரதிராஜா சார் என்னை அடிக்க வேண்டும், முதலில் தயங்கினார். பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்.

தங்கர்பச்சானுடன் நிறைய பேசுவோம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால்தான் இப்படத்தில் நான் இருக்கிறேன். தங்கர் பச்சான் என்னுள் நிறைந்தவன் என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அது ஏன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். அதேபோல், அவரும் எனக்குள் நிறைந்திருப்பார். ஜி.வி. நீங்கள் நன்றாக பணியாற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.

நடிகை மஹானா சஞ்சீவி பேசும்போது, “பள்ளிக்கூடம் படிக்கும்போது தங்கர்பச்சான் சாரின் ‘பள்ளிக் கூடம்’ படம் பார்த்தேன். இந்த படத்திற்கு என்னை அழைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. “நீ தமிழ் பெண் என்பதால்தான் உன்னை இந்த படத்திற்கு அழைத்தேன்…” என்று கூறினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பெரிய இயக்குநர்களுடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். ஜி.வி.பிரகாஷ் சார் இசையில், சைந்தவி மேடம் பாடியிருக்கிறார். வைரமுத்து சார் வரிகளில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.

என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் மீனா குமாரி, என்னுடைய வயதிற்கு மீறியதான கதாப்பாத்திரம். இப்படத்தில் நடித்திருக்கிறேன் என்பதைவிட வாழ்ந்திருக்கிறேன் என்றுதான் கூற வேண்டும். அதேபோல், படத்திலும் கிளிசரீன் உபயோகிக்காமல் நடித்தேன். “அதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்…” என்று கேட்டார் இயக்குநர். நான் இரண்டு நிமிடங்களை எடுத்துக் கொண்டு அந்தக் கதாபாத்திரத்தை நினைத்து ஒவ்வொரு காட்சியிலும் கிளிசரீன் போடாமல்தான் நடித்திருக்கிறேன். மேக்கப் இல்லாமல் என்னை அழகாக காட்டியிருப்பதற்கு நன்றி. பாரதிராஜா சாருடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன்…” என்றார்.

கதாநாயகி அதிதி பாலன் பேசும்போது, “பல இயக்குநர் ஜாம்பான்களுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். அதிகமான காட்சிகள் பாரதிராஜா சாருடன்தான். இப்படம் எனக்கு கற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. பாரதிராஜா சாரின் ஒவ்வொரு வசனம், அவர் எப்படி உச்சரிக்கிறார் என்று ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டே இருப்பேன்.

இப்படத்திற்காக தங்கர்பச்சான் சாரின் அலுவலகத்திற்கு அழைத்து கதை கூறினார். எனக்கு பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனாலும், மற்றவர்கள் அவர் மிகவும் கோபப்படக் கூடியவர் என்று கூற கேள்விப்பட்டிருந்தேன். ஆகையால், சிறிது பயத்துடனேதான் சென்றேன். ஆனால், அவர் என்னை திட்டவில்லை, அதிகமாக பாராட்டியது என்னைத்தான். எல்லைக் கடந்த வியப்பு என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார். உங்களுடன் பணியாற்றிதை நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன்…”  என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, “ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் கற்பதுதான். அதேபோல், ஒவ்வொரு இசையும் தியானம்தான். இசையைப் பொறுத்தவரை அந்தந்த தருணத்தில் உருவாவதுதான்.

இந்த படம் இரண்டு தந்தைகளைப் பற்றிய கதை. காக்கா முட்டை, விசாரணை, வெயில் அதேபோல், கலைநயமிக்க இசையமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த படம்தான் இந்த கருமேகங்கள் கலைகின்றன. ஆகையால்தான் நான் சம்பளத்தைப் பற்றி நினைக்கவே இல்லை.

கையிலே ஆகாசம் பாடலை இறுதியாகத்தான் சுதாவிடம் கூறினேன். அதேபோல், இயக்குநர்கள் அந்த நம்பிக்கையை கொடுக்கும்போது நிறைய படைப்பு உருவாகும். அதுபோல், தங்கர்பச்சான் சாரும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். தங்கர்பச்சான் சார், பாலா சார் போன்றோர்கள் உணர்வுபூர்வமாகத்தான் இசை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்த டியூன் கிடைத்துவிட்டால் திருப்தியாக இருக்கும். எனக்கு எப்போதுமே மக்களின் உணர்வுகளை மையப்படுத்தப்படும் படம்தான் மிகவும் பிடிக்கும். இப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் போன்ற அனைவரின் இசையைக் கேட்டு அதிலிருந்துதான் என்னுடைய இசையை அமைத்து வருகிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் துரை வீரசக்தி பேசும்போது, “இயக்குநர் தங்கர்பச்சானுடன், நண்பராக, அண்ணனாக பல ஆண்டுகளாக இருக்கிறோம். ஒரு முறை இந்தக் கதையை தங்கர்பச்சான் கூறினார். #OMG படம் முடிந்ததும், இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்றேன். இந்தப் படத்தை தயாரிக்க யாரும் முன் வர மாட்டார்கள். நன்றாக யோசித்துக் கொள் என்றார்.

இந்த படம் அவருக்கு மறுபிறவி என்றுதான் சொல்ல வேண்டும். நான் மறுபடியும் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அவருடைய பயணம் மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன். இந்த படத்தை தயாரித்தேன் என்ற பெருமை எனக்கு இருக்கும்.

இந்த படத்திற்கு இவ்வளவு தான் செலவு செய்ய முடியும் என்று திட்டமாக கூறினேன். ஆனால், ஒவ்வொரு ஜாம்பான்களும் வர வர பயம் கூடிக் கொண்டே வந்தது. அதேபோல், ஜி.வி.க்கு என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், இதுவரை 100 ரூபாய் கூட கொடுத்ததில்லை. இந்த படத்திற்கு வரும் லாபத்தில் அவருடைய பங்கை அவர் வீட்டிற்கே சென்று கொடுப்பேன்.

பாலுமகேந்திராவின் மாணவராக இருந்த சிவபிரகாசம் இயக்கத்தில் பேரன்பும், பெருங்கோபமும் என்ற படம் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பணத்தை இயக்குநர் அவருடைய பணமாக நினைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கொடுப்பேன்..” என்றார்.

படத் தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, “இந்த படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்து விட்டு வெளியே வந்தவுடன் இன்னும் சில காலம் என் பெற்றோருடன் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், வாழ்க்கை, வேலை என்று வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால், நேரம் செலவழிக்க இயலவில்லை. கமர்சியல் படங்களைவிட இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் இதயத்தை தொட்டுவிட்டது..” என்றார்.

நடிகர் யோகிபாபு பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த வீரசக்தி மற்றும் தங்கர்பச்சான் சாருக்கு நன்றி. இந்த கதையில் முக்கியமான பாத்திரம் குழந்தைதான். அதன் பிறகு பாரதிராஜா சார், கௌதம் மேனன் சார் என்று பலரும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அனைவரும் உறுதுணையாக இருந்திருக்கிறர்கள்.

தங்கர்பச்சான் ஸார் என்னை ‘நடிப்பு செம்மல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார், அதற்கு நன்றி.  தங்கர்பச்சான் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருடைய மனைவி, ‘மாமா கோபப்படாதீர்கள்’ என்று கூறுவார். அதற்கு, “இல்லம்மா இவர்களுக்கு தமிழே வர மாட்டேங்குது… கோபப்பட்டால்தான் நடிகர்கள் சரியாகப் பேசுவார்கள்” என்று கூறுவார். இப்போது 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்தால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘பரட்டை’ கதாபாத்திரத்தில்தான் நான் நடிக்க விரும்புகிறேன்..” என்றார்.

இயக்குநர் தங்கர்பச்சன் பேசும்போது, “2003-ம் ஆண்டு நான் எழுதிய ஒரு சிறுகதை. தி.நகரில் திருப்பதி கோயிலின் அருகில் ஒரு நண்பரை சந்திக்க காத்திருந்தேன். அப்போது கோயில் வாசலில் இருவர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு உலகத்தைவிட்டே போய் விட வேண்டும். வாழவே விருப்பமில்லை என்ற முகம். அவர் கையில் யோகி பாபு கையில் வைத்திருப்பது போல ஒரு பை வைத்திருந்தார். அதற்கு நேர்மாறாக.. இன்னொருவரும் அதே மன நிலையில். ஆனால் அவர், வாழ்க்கையில் உயர்ந்த பதவியில் இருப்பவராக தோன்றியது. இருவர் முகமும் எழுதப்படாத, உச்சரிக்கப்படாத ஒரே உணர்வை எனக்கு கூறியது.

கோயிலில் இருந்து ஒருவர் பிரசாதம் கொண்டு வந்து தருகிறார். அந்த ஏழை வாங்கிக் கொள்கிறார். ஆனால், அந்த பணக்காரர் தன்மானம் காரணமாக வாங்க மறுக்கிறார். பிறகு வாங்கிக் கொள்கிறார், அவர் கண்களில் பசி தெரிந்தது.

அன்று இரவு வீட்டிற்கு செல்லும்போது இந்த இரு மனிதர்களும் என்னை பாதித்தார்கள். அப்போதுதான் இந்த கதையை எழுதினேன். கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன என்றுதான் பெயர் வைத்தேன். ஆனால், கருமேகங்கள் கலைகின்றன என்று மாறியது. ஆனால், இதையும் ‘கேகே’ என்று மாற்றி விடுகிறார்கள். தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது.

வாழ்ந்து முடித்த ஒருவர், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து அன்புக்காக ஏங்கும் மற்றொருவர் இந்த இரண்டு பேர் போல உலகம் முழுக்க இருக்கிறார்கள். அன்புக்காக ஏங்கி தவிக்கிறார்கள். யாருக்கும் யார் மீதும் அன்பு இல்லை. அதைக் கூற வேண்டும் என்று நினைத்தேன்.

எல்லா ஊர்களிலும் சென்று வியாபாரம் செய்வது சிறந்த படமல்ல. எல்லா ஊர்களிலும் உள்ள மக்களைப் பற்றி எடுக்க வேண்டும். ஆனால், தரமான படங்களை யார் கொண்டாடுகிறார்கள். மக்கள் நல்ல படங்களை திரையரங்கில் பார்க்கக் கூடாது, வீட்டில்தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லை என்று கூறினால், ஏன் படம் நன்றாக இல்லை. பார்க்கணுமே என்று சொல்லி 1000 ரூபாய்க்கு டிக்கட் எடுத்து அந்தப் படத்தை பார்க்கிறார்கள்.

ஆனால், இது போன்ற நல்ல படங்களை திரையரங்கில் வந்து பார்த்தால் இன்னும் இது போன்ற பல படங்களை இயக்குவேன். மக்களின் வாழ்வியலை சொல்லும்படியாக என்னிடம் பல கதைகள் இருக்கின்றன.

பாரதிராஜாவிடம் இந்த கதையைக் கூறிவிட்டு ஒரு வருடம் காத்திருந்தேன். இந்த கதையை யோகிபாபுவிடம் கதையைக் கூறும்போது, இவர் நடிப்பாரா? இந்த கதாபாத்திரம் அவருக்கு ஏற்றதாக இருக்குமா? என்றும் சந்தேகம் என் மனதில் எழுந்து கொண்டு இருந்தது. கதையைக் கேட்டு முடித்ததும், இதைதான் எடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார். அப்போதுதான் அவர் எப்படிப்ட்ட மனிதர் என்று நான் தெரிந்து கொண்டேன்.

நான்  எடுத்த படத்தை பாராட்டுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்து இன்று பல பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் என்ன வந்தது. அப்போ யார் குற்றவாளிகள்? இந்த படம் பார்த்ததும் யார், யாரெல்லாம் அப்பாவைத் தேடி ஓடப் போகிறார்கள் என்று பாருங்கள்.

இந்த படத்தை,  நான் பிரதாப் அவர்களுக்கு படையல் செய்கிறேன். எல்லோரும் சினிமா என்று ஒரே மாதிரி எடுத்துக் கொண்டிருக்கும்போது, திரை மொழியை அடித்து உடைத்தவர். படத்தொகுப்பில் இலக்கணத்தைப் சுக்கு நூறாக புரட்டிப் போட்டவர். அதை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன்.

அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவர் அப்பா பிரெஞ்சு. அம்மா சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்து நாட்டில் அவர்களுடைய இறுதி வாழ்க்கையை அவர்கள் முடிவு செய்துக் கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆகையால், அவருடைய முடிவை அவரே தேடிக் கொண்டார்.

ஆண்டனியின் படத் தொகுப்பைப் பார்த்து ஆச்சர்யம். அவர் மாடர்ன் எடிட்டர். அவரின் உலகம் வேறு. அவரின் பார்வையில் இப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்க ஆசை. அவருக்கு மட்டும்தான் இப்படத்தை முதலில் காண்பித்தேன்.

இந்த படத்தில் எல்லோரும் என்னைத் திட்டியிருப்பார்கள். பாரதிராஜா அண்ணன் இன்னமும் என்னை இப்படி செய்து விட்டானே என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல படைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. யோகிபாபு இன்னும் 5 நாட்கள் தேதி தந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். ஆனால், அதற்காக அவரை குறைகூற இயலவில்லை. அவ்வளவு படங்களை கையில் வைத்திருக்கிறார். 3 நாட்கள், 5 நாட்கள் என்று டேட் கொடுத்து  பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு.

ஜி.வி.பிரகாஷை அவ்வப்போது அழைத்து வேலை வாங்குவேன். இந்தக் குரல் வேண்டாம் என்று பல குரல்களை மறுத்திருக்கிறேன். அனைத்திற்கும் பொறுமையாக இசையமைத்துக் கொடுத்தார்.

தயாரிப்பாளர் வீரசக்தி என் தாயின் வயிற்றில் பிறக்காத சகோதரன். எங்கள் மகள் 6 மாதத்திலிருந்து எங்களுடன் இருக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோ இருக்கிறது. அவர்தான் சாரல். அவரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். நிறைய திட்டியிருக்கிறேன். ஆனால், பேசாமலேயே நடிப்பார். அனைவரையும் அழ வைக்க போகிறார்.

6 நிமிடங்கள், 7-1/2 நிமிடங்கள் என்று ஒரே ஷாட் உள்ள காட்சியில் அதிதி பாலன் அசத்திருக்கிறார். அந்த காட்சியை பார்த்து விட்டு  அனைவரும் கொண்டாடுவீர்கள்..” என்றார்.

Our Score