வி.ஜே. புரொடக்சன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வா கிரிஷ் இயக்கத்தில், சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் ‘அவம்’. இப்படத்தின் ஸ்பெஷலாட்டி என்னவெனில் நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதுதான்..!
மதன் கார்க்கி இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருந்தது. “இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் கமல்ஹாசன் தன் குரலின் வாயிலாக பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மேலும், மதன் கார்க்கியின் கருத்துமிக்க வரிகள் இன்றை இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்..” என்கிறார் படத்தின் இயக்குநர்.
சாதாரண வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும் கார்த்திக், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை சந்தித்ததும், அந்த பெண்ணால் அவன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா சம்பங்கள், மற்றும் அந்த சம்பவத்தால் நிகமும் நிகழ்வுகள்தான் படத்தின் கதையாம்.
இப்படத்தில், கௌரவ் நாயகனாக நடிக்க, பெங்களூரைச் சேர்ந்த காவ்யா ஷேட்டி நாயகியாக நடிக்கிறார். விவேக் லெஸ்தர் உத்து என்பவர் வில்லனாக நடிக்க, கார்த்திக் வில்வா கிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
குகன் எஸ் பழனி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார், இவர் ‘ராஜா ராணி’ படத்தில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஆதியப்பன் சிவா படத்தொகுப்பு வேலைகளை கவனிக்க.. அயனா ஜெயகாந்த் கலை இயக்கத்தை கையாள்கிறார்.