சென்னை கனமழையின் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது பத்திரிகையாள நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ள இமெயில் கடிதம் இது :
ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு. பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும். நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.
ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப் பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாரித்துக் கட்டிய வரிப் பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.
எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, தங்களைக் கடவுளாக அறிவித்துக் கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகள் மீதும் நம்பிக்கை இல்லை. யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தால் அனைவரும் கோடீஸ்வரர்கள்தானே.
இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்து விடுகின்றனர்.
அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாதித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன். ஆனால் அது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல; மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம்.
அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை, பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்..” – இவ்வாறு சொல்லியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.









