சென்னையில் ஏற்பட்டிருக்கும் மழை சேதம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரு காட்டமான அறிக்கையொன்றை கமல்ஹாசனை எதிர்த்து தெரிவித்திருந்தார்.
இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் அது தொடர்பாக இன்று திரும்பவும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அது இங்கே :
“நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று…?’ என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி, நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல. அது மின் அஞ்சல் வழியாக என்னுடைய வட நாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு நான் எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் இப்படி வெளியாகியுள்ளது.
என் கடிதம், தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே..! கடிதத்தில் எங்கும் ‘தமிழக அரசு’ என்ற குறிப்போ, என் வரிப் பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை.
அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
என் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டுவிட்டுவரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோவரும் வலைய தள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வந்த வாதப்பிரதிவாதங்களை நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன். எனது சில நண்பர்களைப்போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான்.
இதற்கு பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னாலேயே வெளிப்படும். என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது எனது தவறு என்பதை இப்போது உணர்கிறேன்.
என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசி வருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்குதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் ‘அவையே முக்கியம். இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம்’ என்றும் விட்டுவிட்டேன். அது தவறு என்பது இப்போது புரிகிறது, அந்தத் தவறுதான் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இது திரு.O. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும், குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
பக்தரும், பகுத்தறிவாளரும், பல மதத்தாரும் எங்கள் இயக்கத்தில் உண்டு. இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய நேரம். மதங்கள், தனி மனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால்கூட அதற்காக நான் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாதபிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து, உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். நம்முடைய கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரும், கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக் கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவண செய்வோம்.
ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து கடந்த 36 ஆண்டுகளாக எங்களது இயக்கம் நற்பணிகளைச் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே, நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்காகவும் சௌகரியத்துக்காகவும்தான்…!
அன்புடன்,
கமல்ஹாசன்.