மின் பிம்பங்கள் நிறுவனத் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம்’ தொடரில் அறிமுகமான நடிகை தேவதர்ஷிணி, டிவி சீரியல் உலகத்தில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, இப்போது சினிமாவிலும் பல கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
‘முனி’ படத்தில் இவருடைய நடிப்பு இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியான பாகங்களிலும் இவர்தான நடிக்கிறார். நேற்று மாலை நடைபெற்ற ‘வாலிபராஜா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தேவதர்ஷிணி கலந்து கொண்டார். இப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
தேவதர்ஷிணி மேடையில் பேசும்போது, “நான் தமிழில் முக்கிய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டேன்.. ரஜினி ஸார் உட்பட. ஆனால் கமல் ஸார்கூட மட்டும்தான் நடிக்க வாய்ப்பு வரலை.. கமல் ஸார் மேடைல இருக்கும்போதே நான் இதைக் கேட்டாத்தான் உண்டு. ஸார் நானும் உங்ககூட ஒரு படத்துலயாவது நடிச்சே ஆகணும்.. அக்கா, அண்ணி கேரக்டரா இருந்தாலும் பரவாயில்லை.. நடிச்சே ஆகணும் ஸார்..” என்று வேண்டுகோள் வைத்தார்.
இவருக்குப் பின் பேச வந்த நடிகர் பஞ்சுவும், இதேபோல் “அண்ணன் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கும் இதுவரைக்கும் கிடைக்கலை.. எனக்கும் அவருடைய அடுத்த படங்கள்ல வாய்ப்பு கொடுத்தா அவர் பேரைச் சொல்லி நாங்களும் பொழைச்சுக்குவோம்..” என்றார்.
கமல் தான் பேசும்போது இவர்களது பேச்சைக் குறிப்பிட்டார். “தேவதர்ஷிணி என்கூட படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அது ‘அக்கா, அண்ணி கேரக்டரா இருந்தாலும் பரவாயில்லைன்னு’ சொல்றாங்க..
என்னோட அண்ணன் பொண்ணு அனுஹாசனே எனக்கு அம்மாவா ஒரு படத்துல நடிச்சாங்க.. நீங்க நடிக்கிறதுக்கு என்ன..? கண்டிப்பா சேர்ந்து நடிப்போம். ஆனா என்ன கேரக்டர்ன்னு உறுதியா சொல்ல முடியாது…” என்று உறுதியளித்தார்..
அண்ணி கேரக்டர்ன்னா ‘முனி’ மாதிரி படம்ன்னா… கமல்ஹாசன் ஓடி வந்து உங்க இடுப்புல உக்காருவாரே..? தாங்கிருவீங்களா மேடம்..?










