ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தாணு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வேலூரில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பிரமாண்டமாக நடத்திக் காட்டிய ரசிகர் மன்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தாணு கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “இதுவரை எந்தவொரு தமிழ்ப் படத்திற்கும் இல்லாத சாதனை ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கு நிகழ்ந்திருக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் ‘கபாலி’ படம் எட்டரை கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரமாகியிருக்கிறது. வருமான வரி சோதனை வந்தாலும் எனக்குக் கவலையில்லை. வெளிப்படையாக உண்மையைச் சொல்கிறேன்.. எட்டரை கோடி ரூபாய்க்கு கபாலி படம் அமெரிக்காவில் வியாபாரமாகியிருக்கிறது. இதுதான் உண்மை.
இதுவரையிலும் தமிழ்த் திரைப்படத்திற்கான உரிமை அமெரிக்காவில் இரண்டரை கோடி ரூபாயைத் தாண்டவில்லை. இப்போதுதான் முதல் முறையாக ‘கபாலி’ இந்த சாதனையை செய்திருக்கிறது..” என்று குறிப்பிட்டார்.
தாணுவின் இந்த வெளிப்படையான பேச்சு தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எந்தவொரு தயாரிப்பாளரும் தனது படத்தின் உண்மையான வியாபார விஷயங்களை வெளிப்படையாக பேசுவதில்லை. அதனால் தாணுவின் இந்த வெளிப்படையான பேச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
மெட்ராஸ் ரஞ்சித் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும் தன்ஷிகா, கலையரசன், ரித்விகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படம் வரும் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.