‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது. ‘மொழி’ படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குநர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி ‘காற்றின் மொழி’-யில் மீண்டும் இணைந்து களமிறங்கியுள்ளனர். இதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விதார்த் ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார். லட்சுமி மஞ்சு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மற்றும் குமாரவேல், பாஸ்கர், மனோபாலா, மோகன்ராமன், உமா பத்மநாபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய… A.H. காஷிஃப் இசையமைதுள்ளார். பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.,) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் G.தனஞ்ஜயன், S.விக்ரம்குமார், மற்றும் லலிதா தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
‘மொழி’ படத்தில்ல் ஊமையாக கண்களாலும், செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா இந்த ‘காற்றின் மொழி’ படத்தில் அதற்கு நேர்மாறான வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதையில் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து புதிதாக சில கதாபாத்திரங்களையும் சேர்த்து புதுமையான பல விஷயங்களோடு இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராதா மோகன்.
பெண்ணை மையப்படுத்திய படம் என்றாலும் ,அனைத்து தரப்பினரையும் கவரும்விதமாக ஜாலியாக குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழக் கூடிய படமாகவும் காற்றின் மொழி படம் இருக்கும் என்று உறுதியளிக்கிறார் ராதா மோகன்.
விதார்த் கூறுகையில் “நான் இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறேன். கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான, அன்பான கணவராக நடித்துள்ளேன். விதார்த் நல்ல நடிகன் என்று இந்த குடும்பப் பாங்கான திரைப்படம் எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கண்டிப்பாக கொடுக்கும்…” என்கிறார் உறுதியான குரலில்..!