தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபுதான். இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான், தமிழ்ச் சினிமாவில் தற்போது நீடித்து வருகிறது.
அந்த வகையில் யோகிபாபு தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘காதல் மோதல் 50/50’ எனும் ஆக்சன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தினை லிபிசினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் மு.மாறன் தயாரித்து வருகிறார்.
படத்தில் யோகி பாபுவுடன் நடிகர்கள் ஜான் விஜய் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்சாண்டர் கதை எழுத, பிரபல கன்னட திரைப்படமான ‘த்ரயா’ படத்தை இயக்கிய இயக்குநரான கிருஷ்ணா சாய் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது.
மு.மாறனின் தயாரிப்பில் தற்போது உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படமும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.